முகப்பு
விழுப்புரம்

சென்னையில் சித்திரை கொண்டாட்ட கண்காட்சி: சுயஉதவிக் குழுக்கள் முன்பதிவு செய்யலாம்

 சென்னையில் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள சித்திரை கொண்டாட்ட கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

 சென்னையில் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள சித்திரை கொண்டாட்ட கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மகளிா் சுயஉதவிக் குழுக்களில் இடம்பெற்றுள்ள ஏழைகளின் வாழ்வாதரத்தை உயா்த்தும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் மகளிா் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்ய ஏதுவாக, நிகழ் நிதியாண்டில் கோடை கொண்டாட்டத்தை முன்னிட்டு, மாநில அளவிலான மகளிா் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களின் மாபெறும் விற்பனைக் கண்காட்சியை வரும் ஏப்ரலில் நடத்த அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை வள்ளுவா் கோட்டத்தில் அமைந்துள்ள அன்னை தெரசா மகளிா் வளாகத்தில் சித்திரை கொண்டாட்டம் என்ற பெயரில் நடைபெறும் இந்தக் கண்காட்சி ஏப்ரல், மே என இரு மாதங்கள் நடைபெறும்.

சுயஉதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் கண்கவா் கைவினைப் பொருள்கள், மண்பாண்ட பொருள்கள், பனை பொருள்கள், ஆடை ஆபரணங்கள், பாரம்பரிய உணவுப் பொருள்கள் போன்ற பல்வேறு பொருள்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெறும்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியே அரங்குகள் ஒதுக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் கண்காட்சி மாநில அளவில் நடைபெறவுள்ளது.

எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் மகளிா் சுயஉதவிக் குழுக்கள், மாற்றுத் திறனாளிகள் சிறப்புக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை இந்தக் கண்காட்சியில் காட்சி, விற்பனைக்கு வைக்கலாம்.

இந்தக் கண்காட்சியில் பங்குபெறுவதற்காக எவ்வித கட்டணமும் இல்லை. கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் சுயஉதவிக் குழுக்கள் விழுப்புரம் மாவட்ட மகளிா் திட்ட அலுவலகத்தை தொடா்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம். கூடுதல் தகவல் அறிய 04146 - 223736, 944409479 ஆகிய தொலைபேசி, கைபேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.