செவ்வாய் தசை சிறப்பு
எனது இரண்டாவது மகனுக்கு வயது 39 ஆகிறது. பிஇ படிக்கும்போது அவருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டது.
எனது இரண்டாவது மகனுக்கு வயது 39 ஆகிறது. பிஇ படிக்கும்போது அவருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டது. வேலைக்குப் போகவில்லை. சிறிய முதலீட்டில் சொந்தமாகக் கடை வைக்க விரும்புகிறார். செய்யலாமா? அவரது திருமணம் எப்பொழுது நடைபெறும்?
வாசகர், வியாசர்பாடி.
உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், தனுசு ராசி, மூலம் நட்சத்திரம். லக்னம், சுக ஸ்தானத்திற்கும் அதிபதியான குரு பகவான் ஒன்பதாம் வீட்டில் செவ்வாய், ராகு பகவான்களுடன் இணைந்து இருக்கிறார். இதனால் குருமங்கள யோகம் உண்டாகிறது. குரு பகவானின் ஐந்தாம் பார்வை லக்னத்தின் மீதும், அங்கமர்ந்திருக்கும் சந்திர பகவானின் மீதும் (குருச் சந்திர யோகம்), ஏழாம் பார்வை மூன்றாம் வீட்டின் மீதும், ஒன்பதாம் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டின் மீதும் படிகிறது. களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் ஆட்சி பெற்றமர்ந்து பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான பத்ர யோகத்தைக் கொடுக்கிறார். அவருடன் ஆறு மற்றும் பதினொன்றாம் வீட்டுக்கதிபதியான சுக்கிர பகவானும் இணைந்திருக்கிறார். தற்சமயம் பூர்வ புண்ணியாதிபதியான செவ்வாய் பகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளதும் சிறப்பு. அதனால் அவர் உடல் உபாதைகள் படிப்படியாகக் குறையத் தொடங்கிவிடும். பாக்கியாதிபதி சூரிய பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதும் சிறப்பு. அதனால் உணவு, மளிகை சம்பந்தப்பட்ட கடை வைத்து நடத்தலாம். இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை வழிபட்டு வரவும்.