பேராலயம் எனப் பொருள்படும் பசலிக்கா அந்தஸ்து கிறிஸ்துவ ஆலயங்களுக்குக் கிடைக்கும் உச்சபட்ச பெருமைக்குரிய தகுதியாகக் குறிப்பிடப்படுகிறது. பசலிக்கா என்ற புராதன கிரேக்கச் சொல்லுக்கு அரச மண்டபம், அழகிய மண்டபம் எனவும், பெரிய எழில்மிகு மண்டபம் எனவும் பொருள் கொள்ளப்படுகிறது. உலகின் முதல் பசலிக்கா ஏதென்ஸ் நகரில் உருவானதாகக் குறிப்பிடப்படுகிறது.
ரோம் அரசர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக மிகப்பெரிய அரசவை மண்டபங்களை அழகுற எழுப்பித்தனர். இதன்படி, அரசர்களின் அரசனான இயேசு கிறிஸ்துவின் பெயரால் ரோம் நகரில் எழுப்பப்பட்ட மிகப் பெரிய ஆலயங்கள் பசலிக்கா என்றழைக்கப்பட்டன. ஒளியமான கலைத்திறன், விரிந்து பரந்த பிரமாண்டம், புராதன சிற்பக்கலை மரபு, பொலிவுறுத் தோற்றம் உள்ளிட்டவைகளுடன் பெருமைக்குரிய வரலாற்றுப் பின்னணியும், உலக மக்கள் வணங்கிப் போற்றும் திருச்சொரூபமும் பேராலய அந்தஸ்துக்கான அடிப்படைகளாகக் கருதப்படுகிறது.
பேராலயங்கள், உயர்நிலை பேராலயங்கள், சிறுதரப் பேராலயங்கள் என இரு வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில், கத்தோலிக்க திருச்சபையின் தலைமை இடமாகிய ரோமில் மட்டும் 13 பேராலயங்கள் உள்ளன. இதில், 5 உயர்நிலைப் பேராலயங்கள். மற்றவை சிறுதரப் பேராலயங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
இந்தியாவைப் பொருத்தவரை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், மும்பை பாந்தாரா மலை மாதா பேராலயம், கோவா போம்சேசு பேராலயம், மயிலாப்பூர் புனித தோமையார் பேராலயம், பெங்களூரு புனித ஆரோக்கிய மாதா பேராலயம், தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம், பூண்டி மாதா பேராலயம், திருச்சி உலக ரட்சகர் பேராலயம் ஆகியன பசலிக்கா அந்தஸ்து பெற்ற சிறுதரப் பேராலயங்கள் ஆகும்.
இதில், வேளாங்கண்ணிக்கு பேராலய அந்தஸ்தை அளித்த பெருமை திருத்தந்தை 23-ஆம் அருளப்பரையும், பேராலய அந்தஸ்தைப் பெற்றுத்தந்த பெருமை தஞ்சை மறை மாவட்டத்தின் முதல் ஆயர் இரா. ஆரோக்கியசாமி சுந்தரத்தையும் சாரும்.
பேராலய அந்தஸ்துக்கு உயர்த்தப்படும் தேவாலயங்களுக்கென சில தனிச் சலுகைகள் வழங்கப்படுவது வழக்கம் என்ற அடிப்படையில், உலகின் பல பகுதிகளிலும் இருந்து வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்களின் நலனுக்காக, வேளாங்கண்ணிக்கு பேராலய அந்தஸ்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை, 1962-ஆம் ஆண்டில் இரண்டாம் வாட்டிகனில் திருத்தந்தை 23-ஆம் அருளப்பரை நேரடியாகச் சந்தித்து வேண்டி விண்ணப்பம் செய்தார் அப்போதைய தஞ்சை மறை மாவட்ட ஆயர் ஆரோக்கியசாமி சுந்தரம்.
ஆயரின் விண்ணப்பத்தையும், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் மகிமைகளையும், புதுமைகளையும் பரிவுடன் பரீசிலித்த, திருத்தந்தை 23-ஆம் அருளப்பர், வேளாங்கண்ணி திருத்தலத்தை சிறுநிலை பசலிக்கா என்ற சிறப்பு நிலைக்கு உயர்த்தி 1962-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ஆம் தேதி உத்தரவிட்டார்.
இந்த வரலாற்று நிகழ்வையொட்டி, நிகழ்ச்சியின் நிரந்த நினைவிற்காக என்ற தலைப்பில் திருத்தந்தை 23-ஆம் அருளப்பரின் முத்திரையுடன், ரோமில் உள்ள புனித ராயப்பர் தேவாலயத்தில் வெளியிடப்பட்ட மடல், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் மகிமைகளைப் பகிரும் மடலாக உள்ளது.