முகப்பு
செய்திகள்

சினிமா அன்று: ஆயிரம் ரூபாய் (1964)

ஒரு காட்சியில் எம்.ஆர். ராதா, நாகேஷிடம் கருப்புப் பணத்தைப் பற்றி பேசும் வசனங்கள் நமது நாட்டில் எக்காலத்துக்கும் பொருந்தும்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:19 PM
பகிர்:

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய்களை மதிப்பிழக்கச் செய்தது மத்திய அரசு. இந்தப்படத்தில், தெருவில் பாட்டுப் பாடிப் பிழைக்கும் வள்ளி, கூத்து முடிந்து திரும்பி வரும்போது 1000 ரூபாய் நோட்டு பறந்து வந்து அவள் மேல் விழும். காலம் ஒரே ஒரு ஆயிரம் ரூபாய் அவளிடம் இருந்ததால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாவாள்.

தற்கொலை செய்துகொள்ள விஷத்தைக் குடிக்கும்போது, இரண்டு கார்கள் கொடுக்கும் ஹாரன்கள் சத்தம் கேட்டு ஒடி வந்து, விபத்தில் சிக்க இருந்த குழந்தையைக் காப்பாற்றிவிடுகிறார் சந்தானம். குழந்தையைத் தேடி வீட்டைவிட்டு வெளியில் வந்த ரேவதி குழந்தையைக் காப்பாற்றிய சந்தானத்தை வீட்டுக்குள் அழைத்துச்சென்று டிபன் சாப்பிடச் சொல்கிறார். சாப்பிட மறுத்துக் கிளம்பும்போது, தற்கொலை முயற்சிக்கான காரணத்தை என்னிடம் சொல்லலாமே என்று ரேவதி கேட்க, காரணத்தை சந்தானம் சொல்வார். இனிமேல் தற்கொலைக்கான முயற்சியை கைவிட்டு விடுங்கள், கண் தெரியாத தம்பியைக் காப்பாற்ற ஆயிரம் வழிகள் இருக்கின்றன என்று சொல்லி அனுப்பி வைக்கிறார் ரேவதி. அறிவுரையைக் கேட்ட சந்தானம் உற்சாகமாக சென்று ரயிலில் பல்பொடி வியாபாரம் செய்கிறார்.

வியாபாரம் முடிந்து, ரயில் நிறுத்தத்தில் இறங்கிச் செல்லும்போது, கூத்து கட்டும் பெண் வள்ளியைச் சந்திக்கிறார் சந்தானம். முதல் சந்திப்பிலேயே சந்தானம், வள்ளி மீது காதல் கொள்கிறார். ஆனால், ஒரு சில நாள்கள் கழித்துதான் வெளிப்படுத்துவார்.

Advertisement

அதேசமயம், குழந்தையைக் காப்பாற்றிய சந்தானத்தைப் பார்த்த முதல் சந்திப்பிலேயே காதல் கொள்வார் ரேவதி. ஆனால், தன்னுடைய ஒருதலைக் காதலை இறுதியில்தான் சொல்வார்.

பொதுவாக தமிழ் சினிமாவில் இரு நாயகிகள் ஒரு நாயகனைக் காதலித்தால் இறுதியில் மூன்று விதமான காட்சிகளில் ஒன்று இடம்பெறும். ஒன்று, இரு நாயகிகளில் ஒரு நாயகியைக் கொன்றுவிடுவார்கள் அல்லது சோகம் தாளாமல் அவளே செத்து விடுவாள். இரண்டாவது, இரு நாயகிகளையும் நாயகன் ஏற்றுக் கொள்வார். இரண்டாவதாகச் சொன்னது நடப்பது மிக அபூர்வம். ஒரு நாயகியை நாயகன் சகோதரியாக ஏற்றுக் கொள்வதும் உண்டு.  

ஆனால், ஆயிரம் ரூபாய் படத்தில் வில்லனால் கதாநாயகன் சந்தானம் கொல்லப்படுவார். எல்லோருக்கும் காதல் தோல்வி! வித்தியாசமான முடிவு.

இப்படத்தில் சர்க்கஸில் நடனமாடும் ரேவதி கதாபாத்திரத்தில் திருவிதாங்கூர் சகோதரிகளில் ஒருவரான ராகினி நடித்திருப்பார். கூத்துக் கட்டும் வள்ளியாக சாவித்திரி சென்னைத் தமிழ் பேசி அனாயசமாக நடித்திருப்பார். தங்கை செல்வியாக பேபி சாவித்திரி நடித்திருப்பார். சர்க்கஸ் கம்பெனியின் மேலாளராக அசோகன் நடித்திருப்பார். சர்க்கஸுக்கு பைனான்ஸ் செய்யும் பைனான்ஸியராகவும் வில்லனாகவும் எம்.ஆர். ராதா நடித்திருப்பார்.

ஒரு காட்சியில் எம்.ஆர். ராதா, நாகேஷிடம் கருப்புப் பணத்தைப் பற்றி பேசும் வசனங்கள் நமது நாட்டில் எக்காலத்துக்கும் பொருந்தும்.  

கே.வி. மகாதேவன் இசையில், பி. சுசிலா பாடிய, ‘ஆனாக்க அந்த மடம் ஆவாட்டி சந்தை மடம்’ என்ற பாடலும், பி.பி.ஸ்ரீனிவாஸ் பி.சுசிலா பாடிய ‘பார்த்தாலும் பார்த்தேன் நான் உன்னைப் போல பார்க்கல’ என்ற பாடலும் அந்தக் காலகட்டத்தில் சூப்பர் ஹிட் பாடல்கள். முதல் பாடலை கவிஞர் மருதகாசி சென்னைத் தமிழ் வார்த்தைகளைக் கொண்டு எழுதியிருப்பார்.

கண் கண்ட தெய்வம் படத்தில் நாகேஷ் வக்கீலாக நடித்திருப்பார். ‘ஆயிரம் ரூபாய்’ படத்தில் சிஐடி போலீஸாக நடித்துள்ளார்.

கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கிய இரண்டாவது படம் இது. இப்படத்தைத் தயாரித்த சின்ன அண்ணாமலை, நடிகர் திலகம் சிவாஜியின் நெருங்கிய நண்பர். சில வருடங்கள் சிவாஜியின் மேலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

நடிப்பு: ஜெமினி கணேஷன், சாவித்திரி, ராகினி, எம்.ஆர்.ராதா, நாகேஷ்,  எஸ்.வி. சகஸ்ரநாமம், அசோகன் மற்றும் பலர்.

பாடல்கள் : கண்ணதாசன், மருதகாசி மற்றும் வாலி

இசை: கே.வி. மகாதேவன்

கதை, வசனம் மற்றும் இயக்கம்: கே.எஸ். கோபாலகிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments