பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ரஜினி படத்தின் கதை யாரை பற்றியது? தயாரிப்பு தரப்பு விளக்கம்!
பா.இரஞ்சித் இயக்கத்தில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் கதை யாரை பற்றியது என்று ...
சென்னை: பா.இரஞ்சித் இயக்கத்தில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் கதை யாரை பற்றியது என்று அந்த படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
கபாலி படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் பா.ரஞ்சித்-ரஜினிகாந்த் கூட்டணி இணையும் படத்தை ரஜினியின் மருமகனான நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் கதையானது மும்பையில் வாழ்ந்து மறைந்த பிரபல தாதா ஹாஜி மஸ்தான் பற்றியது என்று பேச்சு கிளம்பியது.
இந்நிலையில் ஹாஜி மஸ்தானின் மகனான சேகர் நேற்று முன்தினம் ரஜினிக்கு எழுதிய கடிதத்தில் இந்த படத்தில் தனது தந்தையை தவறாக சித்தரிக்க கூடாது என்று கேட்டுக் கொண்டிருந்தார். இதன் காரணமாக மீண்டும் புதிய சர்ச்சை உருவானது.
இந்நிலையில் படத்தின் கதை யாரை பற்றியது என்று அந்த படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த படத்தின் கதையானது ஹாஜி மஸ்தான் கதை கிடையாது. மேலும் யாருடைய வாழ்க்கை வரலாறோ, நிஜ சம்பவங்களை கொண்ட கதையோ அல்ல. மும்பை பின்னணியில் நிகழும் ஒரு கற்பனை கதையாகும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.