2.0 படத்தையடுத்து பா. இரஞ்சித் இயக்கத்தில் காலா என்கிற படத்தில் நடித்துள்ளார் ரஜினி. நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது. இதற்கு முன்பு ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கினார் பா.இரஞ்சித். அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரஜினியை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, நானா படேகர், ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது. பட்ஜெட் - ரூ. 400 கோடி. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகிவருவதால் இதன் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வருகின்றன.
கடந்த தீபாவளியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட 2.0 படம், அடுத்ததாக ஜனவரி 25 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்பிறகு ஏப்ரல் 14 அன்று வெளியாகும் என ரஜினி அறிவித்தார். எனினும் கிராபிக்ஸ் பணிகள் இன்னமும் முடிவடையாததால் ஏப்ரலில் படம் வெளியாவது சந்தேகம் எனத் தெரிகிறது. இதையடுத்து பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படம் ஏப்ரலில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த குழப்பங்கள் தொடர்ந்து நீடிக்கிறது.
இந்நிலையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த ரஜினி இதுகுறித்து கூறியதாவது:
2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே தாமதமாகிறது. காலா அல்லது 2.0 இரண்டில் எது முதலில் வெளியாகும் என்பது இரு நாள்களில் தெரியவரும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.