எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் உருவாகும் சூர்யா - இயக்குநர் செல்வராகவன் இணையும் என்ஜிகே படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்கள். இந்தப் படம் தீபாவளியன்று வெளிவருவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதேபோல ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் படமும் தீபாவளியன்று வெளிவருவதால் இவ்விரு படங்களின் மோதலை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.
இந்நிலையில் திடீரென என்ஜிகே படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் செல்வராகவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அதனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து என்ஜிகே படம் தீபாவளிக்கு வெளியாகாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கிறிஸ்துமஸ் அல்லது பொங்கல் சமயத்தில் படம் வெளியாகவுள்ளதாகத் தற்போது கூறப்படுகிறது.
தன்னுடைய உடல்நிலை குறித்த செய்திகளுக்கு செல்வராகவன் விளக்கம் அளித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது: நண்பர்களே, இது ஒரு சிறு மருத்துவப் பரிசோதனை நடைமுறைதான். நான் நலமாக உள்ளேன். என் வேலையை மீண்டும் தொடங்கியுள்ளேன். என்ஜிகே படப்பிடிப்பு சில நாள்களில் மீண்டும் தொடங்கும். என் மீது அக்கறை செலுத்தியவர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார். இதையடுத்து தீபாவளியன்று சர்கார் படம் மட்டுமே பெரிய போட்டிகள் எதுவுமின்றி வெளியாகவுள்ளது.