ஆர்யா - சாயிஷா ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக விஷால் தனது சுட்டுரையில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
'கஜினிகாந்த் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது ஆர்யா - சயீஷாவுக்கு இடையே காதல் ஏற்பட்டு, இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2019 ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு ஆர்யா - சாயிஷா இணைந்து 'டெடி' படத்தில் இணைந்து நடித்தனர்.
மேலும், ஆர்யாவின் ஒவ்வொரு பட வெளியீட்டின் போது சாயிஷாவும், சாயிஷாவின் ஒவ்வொரு பட வெளியீட்டின் போது ஆர்யாவும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். சமீபத்தில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்திருந்த 'சார்பட்டா பரம்பரை' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் இந்தப் படம் குறித்து பிரபலங்கள், ரசிகர்கள் பகிரும் கருத்துகள் தான் காணப்பட்டன.
ஆனால் சாயீஷா இந்தப் படம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. இதுபற்றி சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சாயிஷாவைக் குறிப்பிட்டு அவரிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த நிலையில் அதற்கான விடை விஷால் மூலம் தெரியவந்துள்ளது.
நடிகர் விஷால் தனது சுட்டுரையில், ''இந்த செய்தியை முதன் முதலில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். மாமாவாகிவிட்டேன். என்னுடைய சகோதரர் ஆர்யா மற்றும் சாயிஷாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. படப்பிடிப்பில் இருக்கிறேன். என் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆர்யா - சாயிஷாவிற்கு வாழ்த்துகள். என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து ஆர்யா - சாயிஷாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். விஷால் - ஆர்யா இணைந்து நடித்து வரம் 'எனிமி' படத்தின் முன்னோட்டம் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.