மகன் இறந்த இரண்டே வாரத்தில் கணவரையும் இழந்த நடிகை கவிதா
கடந்த ஆண்டு கரோனா பரவல் தொடங்கியவுடன் படப்பிடிப்புகளில் கலந்துகொள்வதை நிறுத்திக்கொண்டார்.
கரோனா பாதிப்பினால் கணவர் தசரத ராஜ் மற்றும் மகன் சாய் ரூப் ஆகிய இருவரையும் இரு வார இடைவெளியில் இழந்தார் நடிகை கவிதா.
1976-ல் 11 வயதில் திரையுலகில் அறிமுகமானார் கவிதா. ஆட்டுக்கார அலமேலு, நாடோடித் தென்றல், அமராவதி, பாண்டவர் பூமி என ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். என்றென்றும் புன்னகை என்கிற தொலைக்காட்சித் தொடரில் தற்போது நடித்து வருகிறார். கடந்த ஆண்டு கரோனா பரவல் தொடங்கியவுடன் படப்பிடிப்புகளில் கலந்துகொள்வதை நிறுத்திக்கொண்டார். ஹைதராபாத்தில் தனது குடும்பத்தினருடன் கவிதா வசித்து வந்தார்.
கரோனாவின் 2-வது அலையில் கவிதாவின் கணவர் தசரத ராஜ், மகன் சாய் ரூப் ஆகிய இருவரும் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்கள். மகன் சாய் ரூப் சிகிச்சை பலனின்றி இரு வாரங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்நிலையில் கரோனாவினால் பாதிக்கப்பட்ட கவிதாவின் கணவர் தசரத ராஜும் உயிரிழந்தார். இரு வார இடைவெளியில் கணவர், மகன் ஆகிய இருவரையும் இழந்த கவிதாவுக்குத் திரையுலகினர் ஆறுதல் கூறி வருகிறார்கள்.