செய்திகள்

''அன்று இரவு எனக்கும் இதுதான் நடந்தது'' : சூர்யாவின் 'ஜெய் பீம்' குறித்து முதல்வர் ஸ்டாலின் உருக்கம்

DIN

நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் குறித்து முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார். 

சூர்யாவின் ஜெய் படம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜெய் பீம் படத்தைப் பார்த்தேன் அதன் நினைவுகள் இரவு முழுவதும் மனதைக் கனமாக ஆகிவிட்டன. விளிம்புநிலை இருளர் மக்களின் வாழ்வியலையும், அவர்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்களையும் இதனைவிடத் துல்லியமா, கலைப்பூர்வமாகக் காட்சிப்படுத்த இயலாது என்பதைக் காட்டி விட்டீர்கள். 

நடந்த ஒரு நிகழ்ச்சியை மையமாக வைத்து புனையப்பட்ட திரைக்கதையைாக இருந்தாலும் அது பார்வையாளர் மனதில் ஏற்படுத்திய தாக்கம் என்பது மிக மிகக் கனமானதாக இருக்கிறது. சில நேரங்களில் சில காவல் துறை அதிகாரிகள் செய்யும் தவறுகள், அந்தத் துறைக்கே மாபெரும் களங்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. 

அதே நேரத்தில் உண்மையை வெளிக்கொண்டு வர இன்னொரு காவல்துறை அதிகாரியே துணையாக இருக்கிறார் என்பதையும் காட்டி இருக்கிறீர்கள். நேர்மையும், மனசாட்சியும் கொண்ட அதிகாரிகளால் உண்மை நிலைநாட்டப்படும் என்பதையும் காட்சி உள்ளீர்கள். 

சட்டமும் நீதியும் கொண்டு எத்தகைய அவலத்தையும் துடைத்தெறிய முடியும் என்பதையும் எடுத்துச் சொல்கிறது இந்தப் படம். ஒரு வழக்கறிஞர் (சந்துரு), ஒரு காவல் துறை அதிகாரி (ஐஜி பெருமாள் சாமி) ஆகிய இருதரப்பும் நினைத்தால் சமூக ஒழுங்கீனங்களைத் தடுத்து நிறுத்த முடியும்.

அமைதியான அதே நேரத்தில் அழுத்தமான வழக்கறிஞராக நண்பர் சூர்யா திறம்பட நடித்துள்ளார். நடித்துள்ளார் என்பதைவிட, வழக்கறிஞர் சந்துருவாகவே வாழ்ந்துள்ளார். இக்கதையைத் தேர்வு செய்ததும் , அதனைப் படமாக எடுத்ததும் அதில் நானே நடித்ததுமென மூன்று பாராட்டுகளை சூர்யா பெறுகிறார். 

கதைக்களத்தை கலலைக்களமாக மாற்றிச் சிறப்பாக இயக்கியுள்ள இயக்குநர் ஞானவேல் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற படங்கள் ஏராளமாக வர வேண்டும் என்பதே எனது ஆசையும் விருப்பமும் ஆகும். 

இருளர் குறித்த படம் எடுத்ததோடு தனது கடமை முடிந்துவிட்டது எனக் கருதாமல் பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் மேம்பாட்டுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியினை நண்பர் சூர்யா வழங்கியது என்னை நெகிழச் செய்தது. இருளர் வாழ்வில் ஒளியேற்றும் முயற்சியாகும் இது. இதுபோன்ற செயற்கரிய செயல்களை அனைவரும் செய்ய வேண்டும். 

ஜெய்பீம் படம் பார்க்க நான் சென்ற போது சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துருவை சந்தித்தேன். (நீதியரசர் என்று யாரையும்  சொல்லக் கூடாது என்று சொல்பவர் அவர். ஆனாலும் எங்களுக்கு அவர் நீதியரசர் தான்). அவர் என்னிடம் நீதியரசர் இஸ்மாயில் ஆணையத்தின் அறிக்கையைக் கொடுத்தார்கள்.

மிசா சட்டத்தின் படி நாங்கள் கைது செய்யப்பட்டது குறித்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை அது. காவல் நிலையம் ஒன்றில் நடந்த இதே போன்ற தாக்குதல் தான் சென்னை மத்திய சிறையில் 1976 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் நாள் இரவு எனக்கும் நடந்தது. 

என் மீது விழுந்த பல அடிகளைத் தாக்கியவர் மரியாதைக்குரிய சிட்டிபாபு அவர்கள். அதனால் அவரது உயிரே பறிபோனது. அன்று நடந்த சித்திரவதைகளை சிறை டைரியாக சிட்டி பாபு எழுதி உள்ளார்கள். இந்த நினைவுகள் அனைத்தும் நேற்று ஜெய் பீம் பார்த்துவிட்டு வந்தபோது என் மனக்கண் முன் நிழலாடியது. 

இப்படி பல்வேறு தாக்கங்களை என்னுள் ஏற்படுத்தக் காரணமான ஜெய் பீம் படக் குழுவினருக்கு எனது பாராட்டுகள். நண்பர் சூர்யாவுக்கு எனது வாழ்த்தும் நன்றியும் என்று குறிப்பிட்டுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT