சின்னக்கவுண்டர் படத்தில் யாரையும் தாழ்த்திப் பேசவில்லை: இயக்குநர் ஆர். வி. உதயகுமார்
சின்னக்கவுண்டர் எனப் பெயர் வைத்துவிட்டு கவுண்டர் உயர்ந்தவர் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என நான் சொல்லவேயில்லை.
சின்னக்கவுண்டர் படத்தில் யாரையும் தாழ்த்திப் பேசவில்லை என இயக்குநர் ஆர். வி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஒயிட் லேம்ப் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அந்தோணிசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சாயம். விஜய் விஷ்வா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் சைனி கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், எலிசெபத், பெஞ்சமின் போன்றோர் நடித்துள்ளார்கள். சலீம் மற்றும் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு நாக உதயன் இசையமைத்துள்ளார்.
படிக்கும் மாணவர்கள் மீது சாதி சாயம் பூசுவதால் அவன் வாழ்க்கையே எப்படி திசை மாறுகிறது என்பதை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் ஆர். வி. உதயகுமார் பேசியதாவது:
சாதி வேண்டாம் என்றுதான் நானும் பல நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறேன். பள்ளி விண்ணப்பங்களில் சாதி பற்றியே கேட்கக் கூடாது என ஒரு மசோதாவைத் தாக்கல் செய்துவிட்டால் போதுமே. ஆனால் அதைச் செய்ய முடியாமல் சிலர் தடுக்கிறார்கள். நானும் சின்னக்கவுண்டர் என்று படம் எடுத்தேன். அதற்காக அடுத்தவன் கெட்டவன் என அதில் காண்பிக்கவில்லை. சின்னக்கவுண்டர் என்பது ஒரு விவசாயியின் அடையாளப் பெயர், எங்கள் ஊரில், நான் வளர்ந்த கிராமத்தில்.
சின்னக்கவுண்டர் எனப் பெயர் வைத்துவிட்டு கவுண்டர் உயர்ந்தவர் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என நான் சொல்லவேயில்லை. அந்தப் படத்தில் கவுண்டமணி கதாபாத்திரம் உள்பட இதர கதாபாத்திரங்கள் எல்லாமே உயர்ந்தவர்களாக இருப்பார்கள்.
சமூக நோக்கில் எடுக்கப்படும் சிறு படங்களுக்குத் திரையரங்குகள் கிடைப்பதில்லை. இயக்குநர் சாய்ரமணி சொன்னதுபோல, கடந்த ஆட்சியில் அம்மா திரையரங்கம் என ஒரு திட்டம் பேசப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது. இந்த ஆட்சியில் அதை கலைஞர் திரையரங்கம் என்கிற பெயரிலாவது செயல்படுத்தி ஒவ்வொரு ஊராட்சி, பேரூராட்சிக்கு சிறிய அளவிலான திரையரங்குகளைக் கட்டித்தர வேண்டும், சிறு பட தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைக்கிறேன் என்று பேசினார்.