சின்னத்திரை நடிகை சித்ராவின் மரண வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
மறைந்த நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத், தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று சித்ராவின் தந்தை காமராஜ் உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, சித்ரா மரண வழக்கில் ஹேம்நாத்துக்கு எதிராக போதிய ஆதாரம் உள்ளதால் அவர் மீதான குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்ய முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும், விசாரணை நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | ‘சிவகாசியில் கொல்லம் ரயில் நிற்கவில்லை என்றால்....’: மக்களவையில் விருதுநகர் எம்.பி. எச்சரிக்கை
சின்னத்திரை நடிகை சித்ரா 2020-ஆண்டு டிசம்பர் மாதத்தில் பூந்தமல்லி அருகே உள்ள தனியாா் தங்கும் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக சித்ராவின் தந்தை காமராஜ் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில், அவருடைய கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு, பொன்னேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
பிறகு சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.