ஜெயிலர் படத்துக்கு பிறகு இளம் இயக்குநருடன் ரஜினிகாந்த் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது எண்ணூரில் நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. சண்டைக் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டுவருகின்றனவாம்.
நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதையும் படிக்க | சமீபத்தில் திரையரங்கில் வெளியான படம் பற்றி சிவகார்த்திகேயன் கருத்து - வைரலாகும் விடியோ
இந்த நிலையில் ரஜினியின் அடுத்தப் படம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. ரஜினிகாந்த்திடம் டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி கதை சொன்னதாகவும், நகைச்சுவை கலந்த அந்தக் கதை ரஜினிக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறதாம். ஆனால் இந்தத் தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
டான் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இதன் காரணமாக இந்தப் படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.