கழிப்பறை பிரச்னை: விழிப்புணர்வுக்கு அழைக்கும் கிருத்திகா உதயநிதி
பயணங்களின்போது கழிப்பறை இல்லாமல் மிகுந்த சங்கடங்களை அனுபவித்துள்ளதாக இயக்குநர் கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார்.
பயணங்களின்போது கழிப்பறை இல்லாமல் மிகுந்த சங்கடங்களை அனுபவித்துள்ளதாக இயக்குநர் கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கழிப்பறை குறித்தும் பயன்பாடு குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளது.
சென்னை சாந்தோம் பள்ளியில் ஏப்ரல் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதனைக் குறிப்பிட்டு சுட்டுரையில் விடியோ மூலம் தன்னுடைய கழிப்பறை அனுபவத்தை இயக்குநர் கிருத்திகா உதயநிதி பகிர்ந்துள்ளார்.
Advertisement
Advertisement
இதில் அவர் பேசியதாவது, ''என் கழிப்பறை அனுபவத்தை உங்களுடன் பகிரப்போகிறேன். சிறு வயதிலிருந்தே பயணங்கள் மிகவும் பிடிக்கும். அம்மா அப்பாவுடன் சேர்ந்து பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளேன். பயணம் நல்ல அனுபவமாக இருந்தாலும், பயணத்தின்போது பலரும் சந்திக்கும் பிரச்னை கழிப்பறை.
நம்மில் பலர் பொதுக் கழிப்பறை பக்கம் கூட சென்றிருக்கமாட்டோம். யாரென்று தெரியாத பலருடைய வீடுகளுக்குச் சென்று தங்கள் கழிப்பறையை பயன்படுதிக்க நான் அனுமதி கேட்டு நின்றுள்ளேன்.
இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டறிய வேண்டும். அதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. சென்னை மாநகராட்சி உள்பட பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துகின்றன. சென்னை சாந்தோமில் அடுத்த மாதம் 2ஆம் தேதி தொடங்குகிறது.
இதில், பொதுக் கழிப்பறையை எப்படி மீண்டும் பொதுப் பயன்பாட்டிற்கு கொண்டுவரலாம் என்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளது. பலருடைய ஆலோசனைகளும் கேட்கப்படும். இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
தங்களுடைய கழிப்பறை அனுபவக் கதையை #OnceinaLOO என்ற ஹேஷ்டேக் இட்டு தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர வேண்டும். இதனால் கழிப்பறை குறித்த விழிப்புணர்வு பலரிடம் சென்றடையும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.