இந்துக்களுக்காக சிறை சென்றதில் மகிழ்ச்சி என கனல் கண்ணன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி இந்து முன்னணி அமைப்பின் சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவ்வமைப்பின் மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா சண்டைப் பயிற்சி இயக்குநருமான கனல் கண்ணன் கலந்துகொண்டார்.
நிகழ்வில் பேசிய அவர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என ஆவேசமாக பேசினார். இதனையடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து கனல் கண்ணன் மீது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கனல் கண்ணன் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், புதுச்சேரியில் இருந்த கனல் கண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிக்க | நடிகர் அஜித்குமாருடன் இணைந்த மஞ்சு வாரியர்
இதனையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, தேவையற்ற கருத்துக்களைப் பேசுவது ஃபேஷனாகிவிட்டது என அவரைக் கண்டித்தார். பின்னர் கனல் கண்ணனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இதனயைடுத்து புழல் சிறையிலிருந்து விடுதலையான கனல் கண்ணனுக்கு இந்து முன்னணியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த கனல் கண்ணன், இந்துக்களுக்காக சிறை சென்றது மகிழ்ச்சியே. தொடர்ந்து இந்துக்களுக்காக போராடுவேன் என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.