வணங்கான் படத்தின் டப்பிங் தொடங்கியது!
இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள வணங்கான் படத்தின் டப்பிங் தொடங்கியது.
இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம் வணங்கான். இந்த படத்தில் நாயகனாக அருண் விஜய் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். மிஷ்கின் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். பெரும்பாலான படப்பிடிப்பு கன்னியாகுமரி, திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது.
இதையும் படிக்க: மறுமணம் எப்போது?: நடிகை சமந்தா அதிரடி பதில்!
Advertisement
சமீபத்தில் வணங்கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. அதில், அருண்விஜய் ஒரு கையில் பெரியார் சிலையுடனும் மற்றொரு கையில் விநாயகர் சிலையுடனும் இருந்ததால். ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலானது.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “பாலா அண்ணனுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படம் கன்னியாகுமரியை மையமாக வைத்து உருவாகிவருகிறது. வணங்கான் கண்டிப்பாக பேசப்படும். இது அவருக்கு நல்ல இடத்தைத் தரும். அருண் விஜய்க்கும் சரியான படமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.
தற்போது, டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாக படக்குழு புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. இந்தப் பூஜையில் இயக்குநர் பாலா. நடிகர் மிஷ்கின், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆரம்பத்தில் வணங்கான் படம் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த நிலையில் ஒருசில காரணங்களால் படத்திலிருந்து அவர் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.