'சுந்தரி' சீரியலை தடை செய்யனுமா?
சின்னத் திரை தொடர் ஒளிபரப்பு செய்யப்படுவதை நிறுத்தினால் சமூகம் திருந்திவிடுமா என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'சுந்தரி' தொடரை தடை செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் விடியோ பரவி வருகிறது.
'சுந்தரி' தொடரால் ஆண்களுக்கு உணவு வைக்கவும் மறந்துவிட்டு தொடர்ந்து தொலைக்காட்சியையே பார்த்துக்கொண்டிருப்பதாக அந்த விடியோவில் பேசும் நபர் தெரிவிக்கிறார். இதனால் சமூக வலைதளங்களில் 'சுந்தரி' தொடர் குறித்து பெரும் விவாதம் ஏற்பட்டுள்ளது.
சின்னத் திரை தொடர் ஒளிபரப்பு செய்யப்படுவதை நிறுத்தினால் சமூகம் திருந்திவிடுமா என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சன் தொலைக்காட்சியில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. அழகர் இயக்கும் இந்தத் தொடரில் கேப்ரியல்லா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஜிஸ்னு மேனன் நடிக்கிறார். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு கிராமத்திலிருந்து நகரத்துக்கு வரும் கணவனால் ஏமாற்றப்பட்ட பெண்ணின் வாழ்க்கைப் போராட்டமே கதையின் மூலக்கரு.
இந்நிலையில், இந்த தொடரில் நாயகிக்கு கண் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பல பெண்கள் 'சுந்தரி'க்காக வருத்தப்படுவதாகவும் சமூக வலைதளத்தில் ஒருவர் விடியோ வெளியிட்டுள்ளார். (அவர் சிவசேனை கட்சியைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது)
இந்த விடியோவுக்கு பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலர் 'சுந்தரி' தொடருடன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரையும் நிறுத்த வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.
பாரதி கண்ணம்மா தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி, கடந்த வாரமே நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.