எதிர்நீச்சல் தொடர் வாரத்தின் 7 நாள்களும் எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. டிஆர்பி எனப்படும் அதிக பார்வையாளர்களைக் கொண்ட தொடர்களின் பட்டியலில் சன் தொலைக்காட்சி தொடர்களே பெரும்பாலும் முதல் மூன்று
இடங்களைப் பெற்றுள்ளன.
குறிப்பாக இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர், தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. இரவு 9.30 மணிக்கு
ஒளிபரப்பாகும் தொடர் டிஆர்பி பட்டியலில் முதலிடத்திற்கு வருவது இதுவே முதல்முறை.
இந்தத்தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரத்தில் 6 நாள்களுக்கு ஒளிபரப்பாகி வந்தது. தற்போது ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாகவுள்ளது. ஒரு தொடர் மக்களின் வரவேற்பைப் பார்த்து ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பப்படுவதும் இதுவே முதல்முறை.
திருமணமாகி புகுந்த வீட்டுக்குச் செல்லும் மருமகள்களின் மூலம் பிற்போக்குத்தனங்களை கேள்வி கேட்கும் காட்சிகள் எதிர்நீச்சல்
தொடரில் அதிகம் இடம்பெறுகின்றன. புகுந்த வீட்டுக்குச் செல்லும் மருமகள்கள் துயரப்படுவதையோ அல்லது புகுந்த வீட்டை தியாகம்
செய்து மேம்படுத்துவதையோதான் இதுவரையான தொலைக்காட்சித் தொடர்களில் காண முடிந்தது.
இதனால் எதிர்நீச்சல் தொடர் இல்லத்தரசிகளை மட்டுமின்றி, இளம் தலைமுறையினரையும் கவர்ந்துள்ளது.
எதிர்நீச்சல் தொடரில் மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிபிரியா இசை, நீலகண்டன், மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்தத் தொடரை திருச்செல்வம் இயக்குகிறார். இவர், கோலங்கள், சித்திரம் பேசுதடி, வல்லமை தாராயோ போன்ற தொடர்களை இயக்கியவர்.