விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விரைவில் முடியவுள்ளது. இந்தத் தொடரின் இறுதிநாள் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
இறுதிநாள் படப்பிடிப்பை முடிந்ததும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் கேக் வெட்டி பரஸ்பரம் அன்பை வெளிப்படுத்திக்கொண்டனர்.
விஜய் தொலைக்காட்சியில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாகிவருகிறது. 2018 அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடர், 2023 அக்டோபர் மாதம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
திங்கள் - சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்தத் தொடரில், ஸ்டாலின், சுஜிதா தனுஷ், குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் முதன்மை பாத்திரங்களில் நடித்தனர்.
இந்தத் தொடரின் இறுதிநாள் படப்பிடிப்பு கடந்த வாரம் நடைபெற்றது. இறுதிநாள் படப்பிடிப்பில் தொடரில் நடித்த, பணிபுரிந்த அனைவரும் கலந்துகொண்டனர்.
படப்பிடிப்பு இறுதி நாளில் கேக் வெட்டி பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவலாகின.
இந்நிலையில், படப்பிடிப்பு முடிந்ததும் சுஜிதா தனுஷ் பயணம் மேற்கொண்டுள்ளார். 5 ஆண்டுகளாக தொடர்ந்து சீரியல் எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இளைப்பாறும் வகையில் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கோவாவுக்குச் சென்றுள்ள அவர், இது வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாத உணர்வு. இதை அனுபவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பெண்ணின் கதை என்ற தொடரின் மூலம் சுஜிதா தனுஷ் சின்னத்திரையில் அறிமுகமானார்.