ஜெயிலரில் என் சம்பளம் இதுதான்: விநாயகன்
ஜெயிலர் படத்திற்காக தனக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்து தெரிவித்துள்ளார் நடிகர் விநாயகன்.
ரஜினி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். நெல்சன் இயக்கியிருந்த இந்தப் படம் வெளியான நாள் முதல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
ரூ.600 கோடி வசூலைக் கடந்து ஜெயிலர் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன், அனிருத் ஆகியோரை நேரில் சந்தித்து தன் வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் அவர்கள் அனைவருக்கும் கார்களை பரிசளித்தார்.
பின், லாபத்திலிருந்து தான் விருப்பப்பட்ட தொகையை அவர்களுக்கு காசோலையாகவும் வழங்கினார்.
இதையும் படிக்க: சல்மான் கானுக்கு ஜோடியாக த்ரிஷா?
ஆனால், படத்தில் வில்லனாக நடித்த விநாயகனுக்கு எதுவும் இல்லையா? என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வியெழுப்பினர்.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் விநாயகனிடம், “ஜெயிலர் படத்திற்காக உங்களுக்கு ரூ.35 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உண்மையா?” எனக் கேட்கப்பட்டது.
அதற்கு விநாயகன், “ ஜெயிலர் படத்தின் வெற்றி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ரஜினியுடன் நடித்தது என் பாக்கியம்தான். நீங்கள் சொன்ன தொகையைவிட மூன்று மடங்கு அதிகமாகவே தயாரிப்பாளர் எனக்கு சம்பளம் கொடுத்தார்.” எனக் கூறினார்.