ஆஸ்கர் நம்பிக்கையில் விக்ரம்!
தங்கலான் படம் ஆஸ்கர் வரை செல்லும் என்பதில் விக்ரம் நம்பிக்கையுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் நடிகர் பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட படத்தின் பிரத்யேக மேக்கிங் விடியோ வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இதற்கிடையே, படப்பிடிப்புக்கான ஒத்திகையின்போது விபத்தில் சிக்கிய விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்ததால், சிறிது காலம் ஓய்வில் இருந்தார். தற்போது, மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். இன்னும் 10 நாள்களில் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது.
இதையும் படிக்க: மாமன்னன் தனபால் என்றால்... ஃபஹத் ஃபாசில் யார்?
இந்நிலையில், தங்கலான் படத்தை ஆஸ்கர் விருது வரை கொண்டு சென்றே ஆக வேண்டும் என்பதில் தயாரிப்பு நிறுவனமும் பா.இரஞ்சித்தும் உறுதியாக உள்ளனர். காரணம், இப்படத்திற்காக நடிகர் விக்ரம் கடுமையான உழைப்பைக் கொடுத்துள்ளதாகவும் இதை வீணடிக்கக் கூடாது என்பதில் கவனமாக உள்ளனர்.
விக்ரம் தரப்பிலிருந்தும் இப்படத்திற்காக எத்தனை புரோமோசன் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள தயாராக இருப்பதோடு இப்படம் கண்டிப்பாக ஆஸ்கர் கதவைத் தட்டும் என்பதிலும் நம்பிக்கையுடன் இருக்கிறாராம்!