உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் முன்னெடுப்பால் உச்சநீதிமன்ற நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அங்குள்ள ஊழியர்களுக்கு ‘லாபதா லேடீஸ்’ திரைப்படம் இன்று திரையிடப்படுகிறது.
பாலின உணர்வுகளின் மதிப்பு குறித்த விழிப்புணர்வை உச்சநீதிமன்ற நிர்வாகிகளுக்கு ஏற்படுத்தும் விதமாக தலைமை நீதிபதி சந்திரசூட் இந்த முன்னெடுப்பை செய்ததாகக் கூறப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தின் நிர்வாகக் கட்டிட வளாக அரங்கத்தில் இந்தத் திரையிடல் நடத்தப்பட இருக்கிறது. இந்த நிகழ்வில் படத்தின் இயக்குநர் கிரண் ராவ் மற்றும் தயாரிப்பாளர் அமீர் கான் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.
இது தொடர்பாக பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட் ”உச்சநீதிமன்ற ஊழியர்களுக்கு பாலின உணர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த என் முயற்சியால் இந்த திரையிடல் நடத்தப்படுகிறது. அதிகம் வெளியில் கவனப்படுத்தப்படாத பல விஷயங்கள் உச்சநீதிமன்றத்தில் நடக்கிறது. இப்போதுகூட, உச்ச நீதிமன்ற ஊழியர்களின் சிகிச்சை மற்றும் ஓய்விற்கு முழு நேர ஆயுர்வேத மருத்துவமனையையும் கொண்டு வந்துள்ளோம். இந்த திரையிடல் அனைவருக்கும் இடையிலான பிணைப்பை அதிகப்படுத்த உதவும்” என தெரிவித்தார்.
லாபதா லேடீஸ் திரைப்படம் இந்த ஆண்டு மார்ச் 1 அன்று வெளியானது. நிதன்ஷி கோயல், பிரதிபா ரந்தா, ஸ்பர்ஷ் ஸ்ரீவாஸ்தவா, சாயா கடம் மற்றும் ரவி கிஷன் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்தப் படம், புதிதாக திருமணமான பெண்கள் இருவர் தங்கள் கணவர்களின் வீட்டிற்கு செல்லும் பயணத்தில் தவறுதலாக மாறிவிடுவதாகவும், அதன் பின்னர் நடக்கும் சம்பவங்கள் குறித்து நகைச்சுவையாகவும், உணர்ச்சிகரமாகவும் பேசுகிறது.
இந்தப் படம் குறைந்த செலவில் எடுக்கப்பட்டு பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.8 கோடி வரை வசூலித்து நல்ல விமர்சனங்களைப் பெற்றது. பின்னர் நெட்ஃபிளிக்சில் வெளியானபோதும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.