தேசிய விருது கிடைக்காத வருத்தத்தில் சாய் பல்லவி ரசிகர்கள்!
2022ஆம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியலில் சாய் பல்லவி இடம்பெறாதது அதிர்ச்சியளிப்பதாக ரசிகர்கள் கருத்து.
தென்னிந்தியாவின் பிரபலமான நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. தமிழ் மற்றும் தெலுங்கில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றன. குறிப்பாக மலையாளத்தில் அவர் நடித்த பிரேமம் திரைப்படத்திற்கு தென்னிந்தியா முழுவதும் நல்ல பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நடனத்திற்கென அவருக்கு தெலுங்கில் பல படங்கள் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றன.
2022ஆம் ஆண்டுக்கான தேசிய விருது பெறும் படங்கள், நபர்களின் பட்டியலை மத்திய அரசு நேற்று (ஆக.16) அறிவித்தது.
சிறந்த மலையாளத் திரைப்படமாக சவுதி வெள்ளக்காவும், சிறந்த கன்னடத் திரைப்படமாக கேஜிஎஃப்-2 ஆம் பாகமும், சிறந்த தெலுங்கு திரைப்படமாக கார்த்திகேயா-2 ஆம் பாகமும், சிறந்த ஹிந்தி திரைப்படமாக குல்மோஹரும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கில் சாய் பல்லவி நடித்த விராட பர்வம் படத்துக்கும் எந்த விருதும் தரப்படவில்லை. இதனால் அங்கிருக்கும் சாய் பல்லவி ரசிகர்களும் வருத்தமடைந்துள்ளனர்.
சிறந்த நடிகையாக, திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யா மேனனும், இந்தி படமான குட்ச் எக்ஸ்பிரஸ் படத்தின் மான்ஸி பரீக்குக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டன.
2022ஆம் ஆண்டு தமிழில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான கார்கி படத்துக்கு எந்த விருதும் தரப்படவில்லை. இதனால் சாய் பல்லவி ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.
சமூக வலைதளங்களில் இதுகுறித்து தங்களது ஆதங்கத்தையும் பகிர்ந்து வருகிறார்கள்.
நித்யா மேனன் மீது கோபமில்லை. ஆனால் கார்கி படத்துக்கும் எதாவது விருது கொடுத்திருக்க வேண்டுமென கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மிகப் பெரிய விருது என்பது பார்வையாளர்களின் அன்பும் அவர்களின் பாராட்டுகளுமே. சாய் பல்லவிக்கு வரும் அன்பை நினைத்து நெகிழ்ச்சியாக இருப்பதாகவும் எக்ஸில் அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.