காவியத் தலைவனில் நடித்திருக்க வேண்டிய நடிகர்கள் இவர்களா?
இயக்குநர் வசந்தபாலன் காவியத் தலைவன் படத்தில் நடித்திருக்க வேண்டிய நடிகர்கள் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காவியத் தலைவன். நடிகர்கள் சித்தார்த், பிருத்விராஜ், நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இப்படம் வணிக ரீதியான தோல்விப்படமாக அமைந்தாலும் விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றது.
மேடை நாடகத்தை மையமாக வைத்து படத்தின் கதையை வசந்தபாலன் உருவாக்கியிருந்தார்.
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய வசந்தபாலன், “காவியத் தலைவன் படத்தை இயக்க முடிவெடுத்ததும் இதில் நடிக்கக் கூடியவர்களும் நல்ல நடிப்பாற்றல் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என நினைத்தேன். அதற்காக, நடிகர்கள் சூர்யா மற்றும் விக்ரமை அணுகினேன். இருவரும் நடிக்க ஒப்புக்கொண்டனர்.
ஆனால், வியாபாரக் காரணங்களால் அவர்கள் இணையவில்லை. பின், சூர்யா கதாபாத்திரத்தில் சித்தார்த்தும் விக்ரம் கதாபாத்திரத்தில் பிருத்விராஜும் நடித்தனர். நாயகியாக நயன்தாரா நடிக்க வேண்டியது. அவருக்குப் பதிலாக வேதிகா நடித்தார்.” எனக் கூறியுள்ளார்.
ஒருவேளை இப்படத்தில் சூர்யாவும் விக்ரமும் நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.