தமிழ், தெலுங்கு சினிமாவுக்கு போதாத காலம்போல் இருக்கிறது. தொடர்ந்து வெளியாகும் திரைப்படங்கள் எதுவும் சரியாக வெற்றிபெறாததால் பல திரையரங்கங்கள் திணறி வருகின்றன.
இந்தாண்டில் மலையாள சினிமாக்கள் வசூல் வேட்டையை நிகழ்த்தி வரும் வேளையில் தமிழ், தெலுங்கில் உருவான திரைப்படங்கள் எதுவும் ரசிகர்களைப் பெரிதாகக் கவரவில்லை.
சமீபத்தில் வெளியான ஸ்டார், அரண்மனை - 4 திரைப்படங்கள் வசூல் வெற்றி ஓரளவு ரசிகர்களை திரையரங்குகளுக்கு வர வைத்துள்ளது. ஆனாலும், பல திரையரங்க உரிமையாளர்கள் சரியான படம் அமையாததால் புலம்பி வருகின்றனர்.
இந்த நிலையில், முன்னாள் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் நேர்காணல் ஒன்றை அளித்திருக்கிறார்.
அதில், “நல்ல கதை இருந்தால் மட்டுமே இன்று திரைப்படங்கள் வெற்றி பெறுகின்றன. நல்ல திரைப்படம் வெளியாகாமல் பல திரையரங்க உரிமையாளர்களும் திணறினர். கடந்த 6 மாதத்தில் மட்டும் தமிழகத்தில் 100 திரையரங்குகளுக்கு மேல் மூடப்பட்டுள்ளது. என்ன செய்வது எனக் குழம்பிய நேரத்தில்தான் மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் கைகொடுத்தது. நல்ல படத்திற்கு புரோமோஷன் தேவையில்லை என்பதற்கு மஞ்ஞுமல் பாயஸ் ஒரு உதாரணம். தமிழகத்தில் போஸ்டர் கூட அடிக்காமல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது, ஸ்டார் மற்றும் அரண்மனை - 4 திரைப்படங்கள் நல்ல வசூலைக் கொடுக்கின்றன.
இங்கு நடிகர்களுக்காகவே கதையை எழுதுகின்றனர். நட்சத்திர நடிகர்களுக்கு ஏற்றபடி கதையை மாற்றி, மாற்றி இறுதியில் இயக்குநர்களே என் கதைதானா இது என்கிற குழப்பதையே அடைகிறார்கள். இந்த நிலை மாறினால்தான் தமிழ் சினிமா நன்றாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.