லட்டுவை கிண்டல் செய்வதா? கார்த்திக்கு பவன் கல்யாண் கண்டனம்!
நடிகர் கார்த்தியின் பேச்சை கண்டித்துள்ளார் பவன் கல்யாண்.
லட்டு குறித்து பேசிய நடிகர் கார்த்திக்கு, ஆந்திர துணை முதல்வர் பவண் கல்யாண் எச்சரிக்கை மொழியில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மெய்யழகன் படத்தின் தெலுங்கு புரமோஷன் நிகழ்வு ஹைதராபாத்தில் நேற்று (செப். 23) நடைபெற்றது. இப்படம் தெலுங்கில் ’சத்யம் சுந்தரம்’ என்கிற பெயரில் வெளியாகிறது.
தெலுங்கு வெளியீட்டிற்காக நடிகர் கார்த்தி, இயக்குநர் ச. பிரேம் குமார் உள்பட படக்குழுவினர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அப்போது, தொகுப்பாளர் கார்த்தியிடம், ’உங்களுக்கு லட்டு வேணுமா?’ எனக் கேட்டார். அதற்கு, கார்த்தி ‘இங்கு லட்டு குறித்து பேச வேண்டாம். உணர்ச்சிமிக்க விஷயம். லட்டு வேண்டாம்... தவிர்த்துவிடுவோம்” என்றார். இதைக்கேட்ட பலரும் கார்த்தியுடன் சேர்ந்து சிரித்தனர்.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதற்கு பரிகாரமாக நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் இன்று (செப்.24) காலை விஜயவாடாவில் அமைந்துள்ள ஸ்ரீ துர்கா மல்லேஸ்வரா சுவாமி வர்லா தேவஸ்தான கோயிலில் 11 நாள் பிராயச்சித்த தீக்ஷை என்ற பெயரில் விரதத்தை மேற்கொண்டுள்ளார்.
விரதத்தின்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய பவன் கல்யாண், “சினிமா நிகழ்வில் லட்டுவைக் கிண்டலடிப்பீர்களா? லட்டு உணர்ச்சிமிக்க (sensitive) விஷயமாம். ஒருபோதும் அப்படி சொல்லாதீர்கள். நடிகர்களாக மரியாதை கொடுக்கிறேன். ஆனால், சனாதான தர்மம் என வரும்போது பேசும் வார்த்தையை நூறுமுறை யோசித்து பேச வேண்டும்.” என கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால், சமூக வலைதளங்களில் கார்த்தி டிரெண்ட் ஆகியுள்ளார்.