முகப்பு
செய்திகள்

அன்னபூரணி பட விவகாரம்: வருத்தம் தெரிவித்தார் நயன்தாரா!

அன்னபூரணி பட விவகாரம் தொடர்பாக நடிகை நயன்தாரா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். 

Updated On : 19 ஜனவரி, 2024 at 9:25 AM
பகிர்:

அன்னபூரணி பட விவகாரம் தொடர்பாக நடிகை நயன்தாரா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். 

நடிகை நயன்தாரா நடித்த ‘அன்னபூரணி’ திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. அண்மையில் ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. 
 
இப்படத்தில் பிராமண பெண்ணான அன்னபூரணியை (நயன்தாரா) அசைவம் சாப்பிட்ட வைப்பதற்காக  நாயகன் ஃபர்ஹான் (ஜெய்), “வால்மீகி எழுதிய ராமாயணத்தில் ராமரும், லட்சுமணனும் விலங்குகளை வேட்டையாடி சீதாவுடன் சேர்ந்து உண்டனர்.” என வசனத்தில் குறிப்பிடுவார்.

இந்த வசனத்தால் அன்னபூரணி கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. குறிப்பாக, மும்பையைச் சேர்ந்த ஹிந்து அமைப்பின் இணையப் பிரிவினர், இப்படத்தில் ராமர் குறித்து அவதூறாகப் பேசியது மட்டுமல்லாமல் லவ் ஜிகாத்தை ஆதரிக்கும் வகையில் படம் உருவாகியுள்ளதாகக் காவல்துறையில் புகார் அளித்தனர்.

Advertisement

இப்படத்திற்கு வடமாநிலங்களில் கடும் எதிா்ப்பு எழுந்த நிலையில் நெட்பிளிக்ஸ் தளத்திலிருந்து அன்னபூரணி திரைப்படம் நீக்கப்பட்டது.

இந்நிலையில், நடிகை நயன்தாரா அன்னபூரணி பட விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டு தனது வருத்தத்தை  தெரிவித்துள்ளார். 

அதில், "கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்கமாட்டேன். அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல" எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.