ஆட்சேபனைக்குரிய காட்சிகள்: மனுஷி படத்தை பார்க்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முடிவு!
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் மனுஷி திரைப்பட வழக்கு பற்றி...
'மனுஷி' படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்க கூறியதை எதிர்த்து தயாரிப்பாளர் வெற்றிமாறன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அந்தப் படத்தை ஆக. 24- ஆம் தேதி பார்வையிடுகிறார்.
இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி நடிகை ஆன்ட்ரியா நடித்துள்ள 'மனுஷி' திரைப்படத்தை, தயாரித்துள்ளது. இந்தப் படத்தை இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா படத்துக்கு இசையமைத்துள்ளார்.
படத்தில் 37 ஆட்சேபனைக்குரிய காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, அந்த காட்சிகள், வசனங்களை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி படத்தின் தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
Advertisement
இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வெற்றிமாறன் தரப்பில், விதிகளுக்கு முரணாக தணிக்கை வாரியம் இந்த ஆட்சேபங்களை தெரிவித்துள்ளது. 37 காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க கூறியுள்ளதாக வாதிடப்பட்டது.
இதற்கு மாற்று நிவாரணம் உள்ளதா? என நீதிபதி கேள்வி எழுப்பியதற்கு, உயர்நீதிமன்றம் தான் முடிவெடுக்க முடியும் என வெற்றிமாறன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஆட்சேபனைக்குரிய காட்சிகள் என தணிக்கை வாரியம் சுட்டிக்காட்டிய காட்சிகள், வசனங்கள் சரியானவையா? என ஆய்வு செய்ய படத்தை பார்க்க வேண்டும். வரும் ஆக. 24-ஆம் தேதி இசைக் கல்லூரியில் உள்ள திரையரங்கில் 'மனுஷி' படத்தை பார்வையிட ஏற்பாடு செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
அப்போது, ஆட்சேபத்துக்குரிய காட்சிகள், வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக தீர்மானித்த தணிக்கை வாரியக் குழு உறுப்பினர்களும், பட தயாரிப்பாளர் வெற்றி மாறனும் உடன் இருக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.