முகப்பு
செய்திகள்

இயக்குநர் எனத் தெரியாமலேயே படத்தைப் புகழ்ந்து பேசிய ஆட்டோ ஓட்டுநர்..! அபிஷன் ஜீவிந் நெகிழ்ச்சி!

டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநர் பகிர்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து...

Updated On : 13 ஜூன், 2025 at 5:31 PM
டூரிஸ்ட் ஃபேமிலி போஸ்டர், ஆட்டோ ஓட்டுநருடன் இயக்குநர் அபிஷன். - படங்கள்: இன்ஸ்டா / அபிஷன் ஜீவிந்.
பகிர்:

இயக்குநர் எனத் தெரியாமலேயே படத்தைப் புகழ்ந்து பேசிய ஆட்டோ ஓட்டுநருடன் நிகழ்ந்த நெகிழ்ச்சியான நிகழ்வு குறித்து இயக்குநர் அபிஷன் ஜீவிந் பதிவிட்டுள்ளார்.

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் மே.1 ஆம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தை நடிகர்கள் ரஜினி, சூர்யா, நானி, இயக்குநர் ராஜமௌலி என பலரும் பாராட்டினார்கள்.

Advertisement

சசிகுமாருடன் சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் நடித்த இந்தப் படம் ரூ. 75 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.

கடந்த ஜூன் 2 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியது.

ஆட்டோ ஓட்டுநருடன் நடந்தது குறித்து இயக்குநர் அபிஷன் ஜீவிந் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியதாவது:

புல்லரிக்கப் பேசிய ஆட்டோ ஓட்டுநர்

மாஸ்க் அணிந்து எனது சொந்த ஊருக்கு ஆட்டோவில் சென்றேன். அப்போது ஆட்டோக்கார அண்ணா ‘முகை மழை’ பாடலை அவரது யூடியூபில் எதேர்ச்சையாக வைத்தார். எனது முகம் உடனே மலர்ந்து அவரிடம் ’இந்தப் படம் பிடித்ததா?’ எனக் கேட்டேன்.

அந்த அண்ணா தயக்கமே இல்லாமல், ’டூரிஸ்ட் ஃபேமலி படத்தை 3 முறை திரையரங்கில் பார்த்தேன்’ எனக் கூறினார். அவரது கையைக் காட்டி ’இதோ பாருங்கள், இப்போது அந்தப் படத்தைப் பற்றி பேசினாலும் புல்லரிக்கிறது. அந்தளவுக்கு படம் பிடிக்கும்’ எனக் கூறினார்.

படத்தில் சசிகுமார் சார் கதாபாத்திரத்துடன் எப்படி ஒன்ற முடிந்தது எனக் கூறினார். அவரது சொந்த தந்தையும் குடும்பத்திற்காக கடினமாக உழைத்ததாகக் கூறினார்.

மகிழ்ச்சிக்கு ஈடு இணையே இல்லை

அவரது தந்தை இறந்துவிட்டதால் இந்தப் படம் அவருக்கு பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வந்ததாகக் கூறினார். பேசிக்கொண்டு இருக்கும்போதே உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.

நான்தான் இந்தப் படத்தின் இயக்குநர் எனக் கூறியதும் மிகவும் மகிழ்ச்சியடைந்து படத்தின் மீதான அன்பை வெளிக்காட்டினார்.

என்ன ஒரு தருணம். நம்முடைய சிறிய பங்களிப்பினால் அடுத்தவர்கள் சிரிப்பது, மனம் ஆறுதல் அடைவதை உணரும்போது அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணையே இல்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.