அதிக செலவில் போடப்பட்ட தோட்டா தரணி செட் இதுதானாம்!
தோட்டா தரணி அமைத்த பிரம்மாண்ட செட் குறித்து...
கலை இயக்குநர் தோட்டா தரணி தன் பெரிய செட் அமைப்பு குறித்து பேசியுள்ளார்.
இந்தியளவில் பிரபலமான கலை இயக்குநர் தோட்டா தரணி. ஓவியரான இவர் கலை இயக்குநராக பல சாதனைகளையும் ஆச்சரியப்படுத்தும் செட் அமைப்புகளையும் செய்தவர்.
முக்கியமாக, நாயகன் திரைப்படத்தில் இடம்பெற்ற தாராவி காட்சிகளெல்லாம் சென்னையில் அமைக்கப்பட்டவைதான். மேலும், இந்தியன் திரைப்படத்தின் சுதந்திர போராட்டக் காட்சிகள் உள்பட பலவற்றை தத்ரூபமாக செட் போட்டு அசத்தியவர் தோட்டா தரணி. சிவாஜியில் இடம்பெற்ற, ‘வாஜி.. வாஜி..’ பாடலை மறக்க முடியுமா?
காதலர் தினம், தசாவதாரம், பொன்னியின் செல்வன் என காலகட்டத்திற்கு ஏற்ற திரைப்படங்களுக்கான கலை இயக்குநர் பட்டியலில் முதல் தேர்வாக இன்றும் தோட்டா தரணியே முன்னணியில் இருக்கிறார். இறுதியாக, குபேரா, ஹரிஹர வீர மல்லு, காட்டி ஆகிய படங்களுக்கு கலை வடிவமைப்பு செய்திருந்தார்.
அண்மையில், பிரான்ஸ் கலை மற்றும் கலாசார அமைப்பின் மூலம் திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக தோட்டா தரணிக்கு செவாலியே விருது வழங்கப்பட்டது.
இதையும் படிக்க: சினிமாவிலிருந்து விலகும் விஜயலட்சுமி!
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய தோட்டா தரணி தன் செட் பணிகளில் அதிக செலவு செய்து போடப்பட்ட செட், நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான அர்ஜுன் படத்தில் இடம்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் செட்தான் என்றும் இதற்கு 2004-லிலேயே ரூ. 3.5 கோடி செலவானது என்றும் தெரிவித்துள்ளார். (இன்றைய மதிப்பைக் கணக்கிட்டால் ரூ. 50 கோடிக்கும் மேல்)
அர்ஜுன் திரைப்படத்தில் காட்டப்பட்ட மீனாட்சி அம்மன் கோவில் செட் அமைப்பு இன்றும் இந்திய சினிமாவின் சிறந்த கலை உருவாக்க பணிகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. முக்கியமாக, படத்தில் இடம்பெற்ற, ‘மதுரா, மதுரா’ பாடலில் தத்ரூபமாக மீனாட்சி அம்மன் கோவிலுக்குக்குள் படப்பிடிப்பு செய்யப்பட்டதுபோல் இருந்தது ரசிகர்களிடம் மிகப்பெரிய வியப்பை ஏற்படுத்தியது.