தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?
ஜன நாயகன் வெளியீடு குறித்து...
ஜன நாயகன் திரைப்படம் இம்மாதம் வெளியாக வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
ஜன நாயகன் திரைப்படம் பொங்கலையொட்டி ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், சில காட்சிகள் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி சான்றிதழ் வழங்குவதை தணிக்கை வாரியம் நிறுத்தி வைத்தது.
இதனைத் தொடர்ந்து சென்னை உயா் நீதிமன்றத்தில் கே.வி.என். புரொடக்ஷன் நிறுவனம் தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தது.
Advertisement
வழக்கு விசாரணைகள் நடைபெற்று இறுதியில் தணிக்கை வாரியத்துக்குச் சாதகமாகவே தீர்ப்பளிக்கப்பட்டது. அதனால், ஜன நாயகன் திரைப்படத்தை மறுதணிக்கை செய்ய முடிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் உள்ள வழக்கை திரும்பப் பெறுவதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனால், பிப். 20 ஆம் தேதி வெளியீடாக ஜன நாயகன் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தணிக்கை வாரியம் மறுதணிக்கைக்காக திரைப்படத்தைப் பார்ப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், மார்ச் மாத துவக்கத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் ஜன நாயகனை தேர்தலுக்குப் பின்பே திரைக்குக் கொண்டு வருவார்கள் எனத் தெரிகிறது.