பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து பணப்பெட்டியுடன் வெளியே வந்த கானா வினோத், தனது நண்பர் கமருதீனிடம் பேசினார்.
கானா வினோத்துக்கு விடியோ கால் மூலம் தொடர்புகொண்ட கமருதீன், வெற்றியுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து திரும்பியதற்கு வாழ்த்து கூறினார்.
தான் வெற்றி பெற்றதைப் போன்றே நீயும் வெற்றி பெற்றுள்ளாய் என கமருதீனிடம் கானா வினோத் கூறினார். மேலும், தமிழ்நாட்டின் எதிர்கால கதாநாயகன் எனவும் கமருதீனை குறிப்பிட்டார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்ததைப் போன்றே வெளியேறிய பிறகும் இருவரிடையேயான நட்பு, கள்ளம் கபடமற்று உள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்டு வாங்கிக் கொண்டு எந்தவித சலுகைகளும் இல்லாமல் கமருதீன் வெளியேற்றப்பட்டார்.
இதனால், அவரின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டதாக பலரும் கருத்துகளைக் கூறிய நிலையில், தமிழ்நாட்டின் எதிர்கால கதாநாயகன் என கமருதீனை கானா வினோத் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். இந்த விடியோ இணையதளத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தில் திவ்யா கணேசன், அரோரா, சபரிநாதன், விக்கல்ஸ் விக்ரம் என நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இறுதிப்போட்டியில் உள்ளனர்.
டிக்கெட் டூ ஃபினாலே வென்று நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார் அரோரா. பின்னர் கானா வினோத், சான்ட்ரா, விக்கல்ஸ் விக்ரம், சபரிநாதன், திவ்யா கணேசன் ஆகியோருடன் சேர்த்து 6 பேர் இறுதிப் போட்டியாளர்களாகத் தேர்வாகினர்.
பணப்பெட்டிக்கான போட்டிகள் முடிந்த நிலையில், இறுதிப்போட்டியாளர்களில் ஒருவராக இருந்த கானா வினோத் ரூ. 18 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
குறைந்த வாக்குகளைப் பெற்றதாக கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து சான்ட்ரா வெளியேற்றப்பட்டார்.
தற்போது திவ்யா கணேசன், அரோரா, சபரிநாதன், விக்கல்ஸ் விக்ரம் என 4 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். இவர்கள் 4 பேருக்கும் மக்கள் வாக்களிக்க வேண்டும்.
இதில், அதிக வாக்குகளைப் பெறும் நபர் பிக் பாஸ் சீசன் 9 வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். வெற்றியாளருக்கு ரூ. 50 லட்சம் பரிசுத் தொகையும் கோப்பையும் வழங்கப்படும்.
உற்சாக வரவேற்பு
பிக் பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்டு கொடுக்கப்பட்டு விஜே பார்வதியுடன் சேர்ந்து கமருதீனும் வெளியேற்றப்பட்டார். போட்டியின்போது தகாத வார்த்தைகளால் பேசி, சான்ட்ராவை காரில் இருந்து மனிதாபிமானமற்ற முறையில் தள்ளிவிட்டதை சுட்டிக்காட்டி ரெட் கார்டு வழங்கப்பட்டது.
இதனால் கடந்த சில நாள்களுக்குப் பிறகு பொதுவெளியில் வந்த கமருதீனுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதேபோன்று கடந்த வாரம் பணப்பெட்டியுடன் வெளியேறிய கானா வினோத்துக்கும் அவரின் மனைவி இன்ப அதிர்ச்சி கொடுத்து வரவேற்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.