திரை விமரிசனம்

முஸ்லிம் என்பதால் இவ்வளவு பிரச்னையா ? விஷ்ணு விஷாலின் 'எஃப்ஐஆர்' திரை விமர்சனம்

எஸ். கார்த்திகேயன்

விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள, மனு ஆனந்த் இயக்கிய  'எஃப்ஐஆர்' திரைப்படத்தைத் திரையரங்குகளில் வெளிவருகிறது, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வழியே.

கெமிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு படிப்புக்கு ஏற்ற சரியான வேலைக்கு முயன்று வருகிறார் இர்ஃபான் அஹமத். தற்காலிகமாக ஒரு ரசாயனத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ஐஎஸ்ஐஸ் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் தமிழகத்தில்  தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைக்கிறது.

இர்ஃபான் அஹமத்தான் அந்த தீவிரவாதி என உளவுப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர். தனக்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கும் தொடர்பில்லை என்பதை நிரூபிக்கப் போராடுகிறார் இர்ஃபான். அவரது போராட்டம் வென்றதா? இல்லையா? என்பதை பல்வேறு திருப்பங்களுடன் சொல்லியிருக்கும் படம்தான் எஃப்ஐஆர். 

இர்ஃபான் அஹமத்தாக விஷ்ணு விஷால் நடித்திருக்கிறார். படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் என பெண் கதாபாத்திரங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பெரிதாக காதல் காட்சிகள் இல்லாதது ஆறுதல்.

கௌதம் மேனனுக்கு இந்தப் படத்தில் கௌரவ தோற்றம். இறுதிக் காட்சியில் அவருடைய குரல் வழியாக சில உண்மைகளை பார்வையாளர்களுக்குத் தெரியப்படுத்தியிருப்பது சிறப்பு.

ஒரு முஸ்லிம் என்றாலே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் மன நிலைக்கு எதிராகப் பேசுவது இயக்குநரின் நோக்கமாக இருக்கிறது. எங்கு சென்றாலும், நீங்கள் மதவாதியா என்ற கேள்வியைத் தொடர்ந்து எதிர்கொள்கிறார் இர்ஃபான்.  அவர் முஸ்லிம் என்பதனாலேயே வேலை கொடுக்கத் தயங்குகின்றனர். அந்தக் காட்சிகள் ஒரு முஸ்லிம் இளைஞனின் வலியைப்  புரிந்துகொள்ள வைக்கின்றன. 

ஆனால், அவரே தவறான பிம்பத்தையும் கட்டமைக்கிறார். அந்தப் படம் உண்மையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தமிழகத்தில் செயல்படுவதுபோல் காட்டப்படுவது குறிப்பிட்ட சமூக மக்களுக்கு இன்னும் சிக்கலைத்தான் ஏற்படுத்தும். இந்த விஷயத்தை இயக்குநர் சற்றுக் கவனமாகக்  கையாண்டிருக்கலாம்.

கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் மதமாற்றம் ஒரு விவாதப் பொருளாக  இருந்துவரும் நிலையில் மதமாற்றம் தொடர்பாகப் படத்தில் வரும் சில வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தும்  ஆபத்திருக்கிறது.  

எல்லா காட்சிகளுமே மேலோட்டமாகவே எழுதப்பட்டிருக்கின்றன. விஷ்ணு விஷால் கதாபாத்திரம் மேலோட்டமாக காட்டப்படுவது புரிகிறது. காரணம் அவர் தீவிரவாதியா இல்லையா என்ற சந்தேகத்தைப் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்த அவ்வாறு செய்திருக்கிறார்கள். ஆனால், காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக இருக்கும் அவரது அம்மாவுக்குக்கூடவா விஷ்ணு விஷாலைப் பற்றி தெரியாமல் இருக்கும்? 

மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா என பிற கதாபாத்திரங்களும் மேலோட்டமாகவே இருக்கின்றன. விஷ்ணு விஷாலைத் தவிர்த்து வேறு எந்தக் கதாபாத்திரமும் மனதில் பதியவில்லை. இருப்பினும் இடைவேளைக்கு முந்தைய பகுதிகள் நம்மை இருக்கை நுனிக்கு வரவழைக்கின்றன. அந்த இடங்களில் இயக்குநரின் எழுத்து நன்றாக இருக்கிறது.

இசையமைப்பாளர் அஸ்வத் தனது இசையின் மூலம் படத்துக்குக் கூடுதல் பரபரப்பை அளித்திருக்கிறார். அவரது பாடல்கள் பெரிதாக எந்த  தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் கடந்துபோகின்றன. பிரதமராக மோடி போன்ற தோற்றமுடையவரைக் காட்டுகிறார்கள். அவர் தீவிரவாதியின் பெயரைக் கேட்டுவிட்டு, ''தீவிரவாதி என்றால் தீவிரவாதிதானே, பெயரில் என்ன இருக்கிறது'' என்கிறார். இதனை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் எனத் தெரியவில்லை. 

ஹேக்கிங் போன்ற விஷயங்கள்கூட மிக எளிதாக நகைச்சுவையாக காட்டப்படுகின்றன. படத்தில் சவாலான விஷயங்கள்கூட எளிதாக நடந்துவிடுகின்றன. அதற்கு படத்தின் இறுதியில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மிக முக்கிய பிரச்சனையை எடுத்துக்கொண்டு அதை அலட்சியமாகக்  கையாண்டிருக்கிறார் இயக்குநர் மனு ஆனந்த். முதல் பாதியில் பார்வையாளர்களிடம் இருந்த பதைபதைப்பு இரண்டாம் பாதியில் காணாமல்போகிறது. 

திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இந்த எஃப்ஐஆர்  திரைப்படம் ஒருவேளை நல்லதொரு திரில்லர் அனுபவத்தைக் கொடுத்திருக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT