முகப்பு
கட்டுரைகள்

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 136: இந்தியா - இலங்கை மோதல் முற்றுகிறது!

அமைதிப் படையைத் திரும்பப் பெறுவது குறித்து பிரேமதாசா எழுதிய கடிதத்துக்கு ஜூன் மத்தியில் பிரதமர் ராஜீவ் காந்தி பதில் எழுதினார். அந்தக் கடிதத்தில், ""இந்திய அமைதிப் படையைத் திரும்பப் பெறுவது, ஒப்பந்தத்த

Updated On : 25 டிசம்பர், 2023 at 3:58 PM
பகிர்:

அமைதிப் படையைத் திரும்பப் பெறுவது குறித்து பிரேமதாசா எழுதிய கடிதத்துக்கு ஜூன் மத்தியில் பிரதமர் ராஜீவ் காந்தி பதில் எழுதினார். அந்தக் கடிதத்தில், ""இந்திய அமைதிப் படையைத் திரும்பப் பெறுவது, ஒப்பந்தத்தை முழுமையாகச் செயல்படுத்துவது ஆக இரு விஷயங்கள் குறித்து, இரு தரப்பாரும் பேசி முடிவுக்கு வரவேண்டிய விஷயமாகும். மேலும், ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதும், அமைதிப் படையைத் திரும்பப் பெறுவதும் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும்'' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

  இதன் மூலம் பிரேமதாசாவின் விருப்பப்படி, ஜூலை இறுதியில் அமைதிப்படை இந்தியா திரும்ப வாய்ப்பில்லை என்று கண்டதும் அவர் எரிச்சலுற்றார். அதுவும் தவிர, வடக்கு - கிழக்கு மாகாண சபைக்கு பாதுகாப்புக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வலியுறுத்துவதன் மூலம் அதற்கான முயற்சியிலும் இந்தியா தீவிரம் காட்டியது.

  இதன் வெளிப்பாடுதான் தமிழ் தேசிய ராணுவத்திற்குக் கட்டாய ஆள் சேர்ப்பு. அதே நேரத்தில், இந்திய அமைதிப் படை இலங்கை மண்ணைவிட்டு அகலக்கூடாது என கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இந்தப் பணியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான குழுக்கள் தீவிரம் காட்டின. இது குறித்து விடுதலைப் புலிகள் இயக்கம் வெளியிட்ட (5 ஜூன் 1989) அறிக்கையில், "நாம் முன்பு இந்திய அரசிடம் (அ) தமிழ், முஸ்லிம் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே என்றும் (ஆ) இந்திய அமைதிப்படை வெளியேற வேண்டும் என்றும் (இ) சர்வதேச அமைதிப்படை ஒன்று இலங்கை வரவேண்டும் - என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்த கோரிக்கை வைத்தோம். அன்று அதை ஏற்காமல், இன்று கையெழுத்து இயக்கம் நடத்துவது ஏன்? என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

  இதே நிலையில்தான், இலங்கையின் வடக்குப் பகுதி மக்களின் நிலையும் இருந்தது. கட்டாய ஆள்சேர்ப்பு என்பது இளைஞர்களை வீட்டிலேயே முடக்கிப் போட்டது. வடக்கு-கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாள் அரசுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட வேண்டும், நிதி அளிக்கப்பட வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்ட நிலையில் பிரேமதாசா அரசு இக்கோரிக்கையைக் கண்டுகொள்ளவே இல்லை.

  இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் இணைந்து போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்தனர். இதனையொட்டி, விடுதலைப் புலிகள் இயக்கம் மீது போர் நடவடிக்கைக் கூடாது என்றும், போர் தொடர்ந்தால் அது, தங்களின் சமாதானப் பேச்சுக்கு ஊறு விளைவிப்பதாக அமையும் என்றும் தில்லிக்கு இலங்கை அரசு செய்தி அனுப்பியது.

  ஆனால் தில்லியோ, இலங்கைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் அமைதிப்படை வந்த பின்னர் நேரடிப் போர் நடைபெறவில்லை என்றும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் அந்தப் போர், அமைதிப்படை - விடுதலைப் புலிகள் இடையேதான் நடைபெற்று வருவதாகவும் பதில் அளித்தது.

  அதுமட்டுமன்றி, "இன்னும் கையளிக்கப்படாத ஆயுதங்களை ஸ்ரீலங்கா அரசிடம் புலிகள் ஒப்படைப்பதுடன், வன்செயல்களை முற்றாகக் கைவிட வேண்டும். அப்படியிருந்தால்தான் போர் நிறுத்தம் அர்த்தமுள்ளதாக இருக்கும்' என்றும் கூறியது.

  இதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள், அமைச்சர் ஹமீதைத் தொடர்புகொண்டு, "ஆயுதத்தைக் கீழே போடுவது என்ற பிரச்னையைத் தீர்ப்பது ஸ்ரீலங்கா அரசினுடையது என்றும், தமிழ் தேசிய ராணுவம் என்ற பெயரில் வலுவான ராணுவக் கட்டமைப்பை அமைதிப்படை ஏற்படுத்துவதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், புலிகள் ஆயுதக் கையளிப்புக்கு முன்னதாக அமைதிப்படையும், அதன் ஆதரவு பெற்ற குழுக்களும் புலிகளுக்கெதிரான வன்செயலைக் கைவிடுவார்கள் என இந்திய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பு மூலம் இந்தியாவுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்கள்.

  பிரமேதாசா விடுதலைப் புலிகளின் கருத்துகளை ஏற்று, தனது அடுத்த கடிதத்தில் அவற்றை எதிரொலித்தார். இதற்கு தில்லியில் இருந்து (ஜூலை 11, 1989) வந்த கடிதத்தில், பல்வேறு புகார்களைக் கூறியதுடன் "அமைதிப்படை வெளியேற்றம் குறித்து பேசுவதானால் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த ஒரு அட்டவணை தயாரிக்கலாம்' என்று தெரிவித்த அக்கடிதம், "அரசுத் தலைவர்களிடையே நம்பிக்கை அடிப்படையில் நடைபெறும் அதிகாரப்பூர்வ கடிதங்கள் ஒழுக்க நடைமுறை விதிகளை மீறி அவை பகிரங்கப்படுத்தும் செயலுக்கும்' பிரேமதாசா மீது நேரடிக் கண்டனம் தெரிவித்தது (சுதந்திர வேட்கை: அடேல் பாலசிங்கம்-பக்.321).

  இந்தப் பதிலால் கோபமுற்ற பிரேமதாசா, முப்படைகளின் தலைவர் மட்டுமன்றி, இலங்கையில் உள்ள அமைதிப் படைக்கும் தானே தலைவர் என்ற முறையில் இந்திய அமைதிப்படை ஜூலைக்குள் கட்டாயம் வெளியேற வேண்டும் அல்லது படை முகாமுக்குள் முடங்க வேண்டும் என்ற சட்டபூர்வ உத்தரவை அமைதிப்படைத் தளபதி லெப். ஜெனரல் அமர்ஜித் சிங் கல்கத்துக்கு அனுப்பினார்.

  அவரோ, "ஸ்ரீலங்காப் படைகள் தங்களது பாசறையை விட்டு வெளியேறினால், அவர்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட எங்களை நிர்ப்பந்திப்பவர்கள் ஆவார்கள்' என்று எச்சரித்தார் (மேற்கண்ட மேற்கோள்படி).

  அமிர்தலிங்கம் முளாயைச் சேர்ந்த இவர், எளிமையானவர். 21 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் ஆறு ஆண்டுகள் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

  கொழும்பில் அமிர்தலிங்கம், மாவை சேனாதிராஜா, யோகேஸ்வரன், சிவசிதம்பரம் ஆகியோர் ஒரே அடுக்குமாடி வீட்டில் கீழும் மேலுமான குடியிருப்புகளில் வசித்து வந்தனர். யோகேஸ்வரனிடமிருந்து அவரது பணியாள் மூலமாக வந்த துண்டுச் சீட்டைப் பார்த்து மேலே குடியிருந்த யோகேஸ்வரன் வீட்டுக்குப் போனார் அமிர்தலிங்கம். அவர் மேலே சென்ற சிறிது நேரத்தில் வெடிச் சத்தம் கேட்டு அமிர்தலிங்கம் மனைவி மங்கையற்கரசி மேலே சென்று பார்க்க யோகேஸ்வரன் மார்பில் குண்டு துளைத்து, ரத்த வெள்ளத்தில் கிடந்தார்; அமிர்தலிங்கம் தான் அமர்ந்திருந்த இடத்திலேயே தலையைத் தொங்கவிட்டபடியே சாய்ந்து கிடந்தார். பயந்து போன மங்கையற்கரசி அவரது தலையைத் தூக்கவும் அவர் இறந்ததைக் கண்டார். சுவர் மூலையில் சிவசிதம்பரம் காயங்களுடன் கிடந்தார் (13 ஜூலை 1989) என்று "ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' நூலில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் இறந்த விதம் குறித்து, சி.புஷ்பராஜா குறிப்பிட்டுள்ளார்.

  இக்கொலை முயற்சியில் ஈடுபட்ட விசு, அலோசியஸ், சிவகுமார் மூவரும் அந்த வீட்டின் வெவ்வேறு பகுதிகளில் மெய்க்காவலர்களின் தாக்குதலில் இறந்து கிடந்தார்கள்.

  இந்த மரணத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால் சுட வந்தவர்கள் புலிகள் இயக்கத்தில் முன்னாள் பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் என்று அந்நூலில் கூறப்பட்டுள்ளது.

  அதேசமயம், இந்திய அரசின் ராஜதந்திரியான முக்த் துபேயை, அமிர்தலிங்கம் இந்தியத் தூதுவரகத்தில் ஜூலை 12-இல் சந்தித்ததாகவும், அடுத்த நாள் பி.ஜி. தேஷ்முக்கை சந்திக்க இருந்ததாகவும் ஒருதலைப்பட்சமான தமிழீழப் பிரகடன அறிவிப்பு பற்றிய வதந்தி நிலவிய நேரம் அது என்றும், தமிழ் மக்களுக்கு விடிவு விடுதலைக் கூட்டணி மூலம் ஏற்படும் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் கூறியதாகவும் மாவை.சேனாதி ராஜாவின் குறிப்பை வைத்தும் ஒரு தகவலை சி.புஷ்பராஜா தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

  அதேநேரம் இன்னொரு வாதத்தையும், அவர் அந்நூலில் பதிவு செய்துள்ளார். அதாவது அதிபர் பிரேமதாசா இலங்கைக்கு இந்தியா மூலமான தீர்வு தேவையில்லை என்று முடிவு எடுத்த நிலையில், தாம் விடுதலைப் புலிகளுடன் நட்பு கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் வேளையில், இந்தியப் பிரதிநிதிகள் அமிர்தலிங்கத்தை அழைத்துப் பேசியதை விரும்பாமல் அவரே கூட இதுபோன்ற கொலைகளை ஆட்களை ஏவி செய்திருக்கலாமென்றும் கூறியிருக்கிறார்.

  இதற்கு மேலும் ஒரு தகவலைக் கூறியுள்ளார் சி.புஷ்பராஜா, "ஒருமுறை அடையாறில் இருந்த புலிகளின் அலுவலகம் சென்று, பிரபாகரனுடன் பேசிவிட்டு தனது காரில் அமிர்தலிங்கம் ஏறும்போது, கார்க் கதவைச் சாத்திவிட்ட பிரபாகரன், ""அண்ணா, நீங்கள் கவனம்; உங்களைக் கொல்ல மற்ற இயக்கத்தவர்கள் முனையலாம்'' என்று எச்சரிக்கை செய்தார் என 1993-ஆம் ஆண்டு என்னுடன் பேசியபோது மங்கையற்கரசி அமிர்தலிங்கம் சொன்னார் என்றும் (பக்.509-510) கூறியிருக்கிறார்.

  இவ்வகையான வாதங்களுக்குக் காரணமே எந்த இயக்கமும் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் கொலைக்குப் பொறுப்பு ஏற்காததுதான்.

நாளை: பிரபாகரன் கொலையுண்டதாகப் புரளி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments