ஈரானில் இருந்து இந்திய மீனவர்கள் மீட்பு! ஆர்மீனியாவுக்கு நன்றி தெரிவித்த மத்திய அரசு!
ஈரானில் இருந்து இந்திய மீனவர்களை மீட்பதற்கு உதவிய ஆர்மீனியாவுக்கு மத்திய அரசு நன்றி தெரிவித்துள்ளது...
ஈரான் நாட்டில் சிக்கியிருந்த இந்திய மீனவர்களை மீட்க உதவிய ஆர்மீனியா அரசுக்கு, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களால், வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், பல்வேறு நாடுகளின் விமானப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்கள் அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா நாடுகளின் வழியாகவும், இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்கள் ஜோர்டான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் வழியாகவும் தாயகம் திரும்பி வருகின்றனர்.
Advertisement
இந்த நிலையில், ஈரானில் சிக்கியிருந்த இந்திய மீனவர்கள் சனிக்கிழமை (ஏப். 4) அன்று ஆர்மீனியா வழியாகப் பத்திரமாக மீட்கப்பட்டதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனால், மீனவர்களை மீட்க உதவிய ஆர்மீனியா அரசுக்கும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அராரத் மிர்சோயனுக்கும் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈரானில் இருந்து 996 பேர் ஆர்மீனியா வழியாகவும், 204 பேர் அஜர்பைஜான் வழியாகவும் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.