முகப்பு
கட்டுரைகள்

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 102: யாழ்ப்பாணம் திரும்பினார் பிரபாகரன்!

பாராட்டு விழாக் கூட்டத்தில் வேட்டி, ஜிப்பா அணிந்து, அங்கவஸ்த்திரத்தில் காட்சி தந்தார் ராஜீவ் காந்தி. அவர் பேசுகையில், "எந்த ஒரு தலைவரின் சாகசமிக்க, அரசியல் மேதைத் தன்மைமிக்க, ஆழ்ந்த உணர்வுடன் கூடிய ஒத

Updated On : 25 டிசம்பர், 2023 at 3:32 PM
பகிர்:

பாராட்டு விழாக் கூட்டத்தில் வேட்டி, ஜிப்பா அணிந்து, அங்கவஸ்த்திரத்தில் காட்சி தந்தார் ராஜீவ் காந்தி. அவர் பேசுகையில், "எந்த ஒரு தலைவரின் சாகசமிக்க, அரசியல் மேதைத் தன்மைமிக்க, ஆழ்ந்த உணர்வுடன் கூடிய ஒத்துழைப்பு இல்லாமல் இந்த உடன்பாடு ஏற்பட்டிருக்காதோ அந்தத் தலைவருக்கு நான் எனது நன்றியை இந்தத் தருணத்தில் சொல்லியாக வேண்டும். அவர் மலைபோல் உறுதியாக ஒத்துழைத்திருக்காவிட்டால் உடன்பாடு ஏற்பட்டிருக்காது. குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு அப்பால் நின்று, உயர்ந்த தேசபக்த உணர்வோடு, மனிதாபிமானத்துடன் தமது ஒத்துழைப்பை அளித்த தலைவர் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரைத்தான் குறிப்பிடுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்'' என்று எம்.ஜி.ஆருக்கு ராஜீவ் காந்தி நன்றி தெரிவித்தார்.

  தொடர்ந்து பேசுகையில், ""இது பழி தீர்த்துக்கொள்ள வேண்டிய தருணம் அல்ல. ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டிய தருணம் இது. சமாதானத்திற்கான புதிய சகாப்தத்தைத் தொடங்க வேண்டும். சீர்குலைந்த வாழ்வை சரிசெய்து, புதிய இணக்கத்தைக் கட்டி வளர்க்க வேண்டும்'' என்றும் குறிப்பிட்டார்.

  மேலும் தொடர்ந்து பேசுகையில், ""இலங்கையின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையான இந்த நேரத்தில் இனப் பிரச்னையின் காரணமாக ஏற்பட்ட மோதல்களில் தங்களது இன்னுயிர்களை ஈந்தவர்களின் நினைவைப் போற்றுகிறேன். இந்த உடன்பாடு நாம் அவர்களுக்குச் செலுத்தும் சிறந்த அஞ்சலியாகும். உயிர் இழந்தவர்களின் நினைவைப் போற்ற வேண்டுமானால், மேலும் ரத்தம் சிந்துவதன் மூலம் செய்ய முடியாது'' என்றும் குறிப்பிட்டார்.

Advertisement

  எம்.ஜி.ஆர். பேசுகையில், ""இலங்கை அரசு தந்த ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றபோது தாக்கப்பட்டு, நல்லவேளையாக ஆபத்தின்றி பிரதமர் திரும்பியுள்ளார்'' என்று குறிப்பிட்ட அவர், ""பிரதமர் ராஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைத்து போராளிகள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்'' என்றும் தெரிவித்தார் (தினமணி 3.8.1987).

  பாராட்டு விழா கூட்டம் முடிந்து, புது தில்லி புறப்படவிருந்த ராஜீவ் காந்தி சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது கேட்ட கேள்வி ஒன்றுக்கு, "உடன்பாட்டில் சிக்கல் ஏற்பட்டால் பேசித் தீர்க்க இயலும். அதற்கான வழிவகை உள்ளது' என்றார்.

  இந்தியாவுக்கும்-இலங்கைக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த உடன்பாடு குறித்து தமிழக அரசு திருப்தி தெரிவித்துள்ளதா என்று இன்னொரு பத்திரிகையாளர் கேட்டதற்கு, "தமிழக அரசைப் பொறுத்த வரையில் அவர்கள் திருப்தி அடைந்திருக்கிறார்களா இல்லையா என்பதை அவர்களிடமே கேளுங்கள்' என்றார்.

  போராளி இயக்கங்கள் தங்களைக் கலக்காமல், ஒப்பந்த விவரங்களை முன்பே தராமல், கடைசி நிமிடத்தில் தந்து, அவர்கள் நெருக்குதலுக்கு உள்படுத்தப்பட்டார்கள் என்பதாகக் கூறி ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார்.

  அதற்கு பதிலளித்த ராஜீவ், ""அந்தப் போராளி இயக்கத் தலைவருக்கு தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு பற்றிய அச்சம், தயக்கமாக அது இருக்கக்கூடும். குறிப்பாக உடன்பாடு ஏற்படுவதற்கு முற்பட்ட காலத்தில் ஏற்பட்ட சம்பவங்களின் அடிப்படையில், அவர்கள் தயக்கத்தை வெளிப்படுத்தி இருக்கலாம்; அல்லது அச்சத்தை வெளியிட்டிருக்கக் கூடும். எந்தவொரு உடன்பாட்டுக்குப் பிறகும், அது நடைமுறைப்படுத்தப்படும் போது தோன்றும் பிரச்னைகள், அவற்றின் தன்மை காணப்படும் நியாயம் ஆகியவற்றை ஆராயலாம்'' என்றும் சொன்னார்.

  உடன்பாட்டுக்குப் பிறகு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வெளியிட்டுள்ள கருத்தும், அவர் யாழ்ப்பாணம் சென்றுள்ளது குறித்தும் கேட்டதற்கு, "அதுபற்றி எனக்குத் தெரியாது. அதுபற்றிய விவரம் என்னிடம் இல்லை' என்றார்.

  உடன்பாட்டுக்குப் பிறகு, பின்வரும் சூழ்நிலைகளில் அவரது பங்கு என்ன நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அவருக்குத் திருப்தி இல்லையே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, பிரதமர் அளித்த பதில், "பிரபாகரனை நான் பார்க்கவில்லை, அதுபற்றி எனக்குத் தெரியாது' என்றார்.

  அன்றைய தினம் (2.8.1987 ஞாயிறு) காலையிலேயே சிறப்பு விமானம் ஒன்றின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரன் சென்னை வந்தார். அவர் நேராக தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரைச் சந்தித்து பேசினார்.

  சென்னை வந்த பிரபாகரனுக்கு "கறுப்புப் பூனை' கமாண்டோக்கள் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஈரோஸ் தலைவர் வி.பாலகுமாரனையும் பிரபாகரன் சந்தித்துப் பேசினார்.

  பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, "விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிராந்திய கமாண்டர்களுடன் பேசிய பிறகு ஆயுதம் கையளிப்பு விஷயம் முடிவு செய்யப்படும்' என்றார்.

  பின்னர், பிற்பகலில் ராணுவ விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் அவர், யாழ்ப்பாணம் சென்றார். அவருடன் யோகி, திலீபன் ஆகியோரும் சென்றனர். சுதுமலை அம்மன் திடலில் வந்து இறங்கிய அவருக்கு, திரளான அளவில் மக்கள் கூடியிருந்து வரவேற்பு அளித்தார்கள். பின்னர் காரில் ஏறி நகருக்குச் சென்றார் (தினமணி செய்தி).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments