"நிதிப் பட்டினி'யில் உணவுப் பாதுகாப்பு!
மக்களைப் பசியின்றி, பட்டினி போடாமல் வாழ வைக்கும் "உணவுப் பாதுகாப்பு மசோதா'வை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துடன்
கட்டுரைகள்"நிதிப் பட்டினி'யில் உணவுப் பாதுகாப்பு!
மக்களைப் பசியின்றி, பட்டினி போடாமல் வாழ வைக்கும் "உணவுப் பாதுகாப்பு மசோதா'வை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துடன்
மக்களைப் பசியின்றி, பட்டினி போடாமல் வாழ வைக்கும் "உணவுப் பாதுகாப்பு மசோதா'வை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துடன், "உங்கள் பணம் உங்கள் கையில்' சேரவும் வேண்டும். பொது வினியோகமும், நிபந்தனையுடன் கூடிய பணப்பரிமாற்றமும் நிகழ வேண்டும்.
ஆகவே பிரதமர் மன்மோகன் சிங் உணவுத்துறைச் செயலாளரை அழைத்து, உணவு மானியத்தை அடிப்படையாக வைத்து, அதற்கான நிதி மதிப்பீட்டைத் தயாரித்து, நிதியமைச்சரைக் கலந்து பேசும்படி கடந்த மாதம் கட்டளையிட்டார்.
பொது விநியோக அமைப்பில் வழங்கப்படும் அரிசி, கோதுமையின் கொள்முதல், சேமிப்பு பின்னர் வழங்கல் வரை கருவூலத்திற்கு ஏற்படும் செலவுகள், பின்னர் பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் உணவு மானியம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, "உங்கள் பணம் உங்கள் கையில்' சேர்வதற்கான நிபந்தனை பணப்பரிமாற்றம் பயனாளிகளுக்கு நிர்ணயம் செய்யும் பொறுப்பு உணவு வழங்கல் துறைக்கும் நிதித்துறைக்கும் உள்ளது; அதற்கான மதிப்பீட்டைச் செய்யும் பொறுப்பு "விவசாய விலை நிர்ணயக் குழு'விடம் விடப்பட்டது.
வறுமைக் கோட்டுக்கு மேலும் கீழும் வாழும் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய தொகை எவ்வளவு என்று கவனிக்கப்பட்டது.
விவசாய விலைக் கமிஷன் (ஏ.பி.சி.) இரண்டு வாய்ப்புகளை வழங்கியுள்ளது. 1. உணவுப் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றிவிட்டால் வழங்க வேண்டிய பணம் - அதாவது மூன்றாண்டுகளுக்கு 7,00,000 கோடி ரூபாய்கள் (127 பில்லியன் டாலர்).
2. உணவுப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றாமல் நிறுத்திவைத்தால் 3,00,000 (55 பில்லியன் டாலர்) கோடி ரூபாய் அளவில் அதை குறைத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
மேற்படி விவரங்களுடன் உணவுத்துறைச் செயலர், நிதியமைச்சர் ப.சிதம்பரத்தைப் பார்த்து விவரத்தைச் சொன்னபோது, ""ஏகாதசி விரதந்தான்'' என்று பதில் கூறினார்.
ஏகாதசி விரதம் போதாது. சஷ்டி விரதமும் இருக்க வேண்டும் என்று ஆறுதல் கூறிய உணவுத்துறைச் செயலர் வழங்கிய மாற்று யோசனைதான் ""நிதிப்பட்டினி மசோதா!''
ஆங்கிலத்தில் என்.எஃப்.எஸ்.பி. என்பது "நேஷனல் ஃபுட் செக்யூரிட்டி பில்'. அதே என்.எஃப்.எஸ்.பி.யை "நேஷனல் பைனான்ஷியல் ஸ்டார்வேஷன் பில்'லாகப் பொருள்கொள்ள வேண்டியதுதான் என்று கூறி செயலர் நகைத்தபோது, "இதெல்லாம் ஆகிற காரியமா' என்று சிதம்பரம் திகைத்தாராம். பின்னர், ஆகக் கூடியதை யோசித்தாராம்.
தேசிய உணவுப் பாதுகாப்பு கீழ்க்கண்ட முறையில் செயல்படுத்தப்படும்: கொள்முதல் செய்யப்பட்ட அரிசி, கோதுமை விலைக்கு மேல் 40 சதவீதம் கூட்டி "பொருளியல் விலை' (எகனாமிக் பிரைஸ்) என்ற பெயரில் மாநில அரசுக்கு விற்கும்.
இந்தப் பொருளியல் விலையில் மாநில அரசின் பொறுப்பில் உள்ள ரேஷன் கடை, அரிசி - கோதுமையை விற்கும்.
இன்று வழக்கில் உள்ள மானிய விலை என்பது, ஒரு குடும்பத்துக்கு 35 கிலோ அரிசி ரூ. 3; கோதுமை என்றால் ரூ. 2. பொருளாதார விலை என்பது கொள்முதல் விலையுடன் 40 சதம் கூட்டினால் வரக்கூடியது; உதாரணமாக அரிசி விலை கிலோ ரூ. 21 என்றும் கோதுமை கிலோ ரூ. 20 என்றும் கொண்டால், அரிசியோ கோதுமையோ வாங்காதவர்களுக்கு ரூ. 18 ஷ் 35 = ரூ. 630.
ஆதார அட்டையைக் காண்பித்துப் பணமாகப் பெற்றுக் கொள்ளலாம். "இதுதான் உங்கள் பணம் உங்கள் கையில்'.
பொருளாதார விலை என்பது சிக்கன விலையே தவிர நிஜமான அடக்கவிலை அல்ல. நிஜமான அடக்க விலை என்பது கொள்முதல் விலைக்குமேல் 120 சதவீதம் வரை இருக்கும்.
கொள்முதல் விலை, நெல் வடிவில் 1 கிலோ ரூ. 10 என்றால் அதில் 66 சதவீதம் மட்டும் அரிசி.
அரைவைக் கூலி மறுபடியும் மூட்டை கட்டுதல், கொள்முதல் செய்யப்பட்ட இடத்திலிருந்து அரைவை ஆலைக்குச் செல்ல லாரி வாடகை, ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி அதன் பின்னர் பண்டகசாலைக்குச் செல்லும் லாரி வாடகை.
பின்னர் பண்டக சாலையிலிருந்து ரேஷன் கடைக்குச் செல்லும் லாரி வாடகை என்று கூட்டிப்பார்த்தால் அரிசி அடக்க விலை ரூ. 30 வரை ஆகும்.
உணவுப் பாதுகாப்புச் சட்டம் வந்தால் ரூ. 27 ல 35 = ரூ. 935 வரை வழங்க வேண்டி வரலாம்.
ஆனால், அதுவே நிதிப்பட்டினிச் சட்டம் அடிப்படையில் வழங்கப்படுமானால் சிக்கன விலையையே ரூ. 11 என்று நிர்ணயித்து 8 ல 35 = ரூ. 280 மட்டும் வழங்கப்படலாம்.
இயற்றப்பட்ட சட்டம் யுனீக் அடையாள அட்டையின்படி பணமோ, அரிசியோ தகுதியுள்ள பயனாளிகளுக்கு வழங்கப்படாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாது.
முதல் கட்டமாக இந்தப் பரிசோதனை ஏக தடபுடலுடன் யூனியன் எல்லைப் பிரதேசங்களில் அறிமுகமாகிறது. புதுச்சேரியில் இந்தப் புதுமைத் திட்டம் செயல்பட்டுவிட்டதாகச் செய்திகள் வந்துள்ளன.
மக்கள்தொகை குறைவான பிரதேசங்களில் "உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டம் செயல்படுத்தும்போது சிக்கல் இருக்காது என்று மத்திய அரசு நம்பலாம். ஆனால், முழு இந்தியாவிலும் செயல்பட்டால் ஏற்படக்கூடிய சிக்கல்கள் கொஞ்சநஞ்சமல்ல.
2006-லிருந்து 2010-க்கு வரும்போது குறைந்தபட்ச ஆதரவு விலை என்று கூறப்படும் அரசு கொள்முதல் விலை, நெல்லில் 62 சதவீதமும் கோதுமையில் 54 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2010-இல் நிறைவேற்றப்பட்டு "கையில் பணம்' - ஆதார அட்டைத்திட்டமும் மேற்கொள்ளப்பட்டிருக்குமானால் மேற்படி விலை உயர்வு பயனாளிகளிடம் ரொக்கமாகச் செல்லும்போது அரிசி, கோதுமை விலைகள் தாறுமாறாக ஏறி நுகர்வோர் நொந்து போயிருப்பார்கள்.
"கையில் பணம்' திட்டத்தில் அரசுக் கொள்முதல் நிறுத்தப்பட மாட்டாது. விவசாயிகளுக்குரிய ஆதரவு விலையை வழங்கியே தீர வேண்டும்.
ரிசர்வ் வங்கியிலிருந்து பல லட்சம் கோடிப்பணம் உணவுக் கடன் கணக்கில் பெற்றாக வேண்டும். உணவுக் கார்ப்பரேஷனும் இயங்கவே செய்யும். கொள்முதல் செய்யவும் பணம் வேண்டும். ஆதார அடையாள அட்டைப்படி உணவு மானியமும் வங்கிக் கணக்கில் ரொக்கமாக மாற்றவும் வேண்டும்.
இதனால் ஏற்படக்கூடிய நிதிச்சுமை கொஞ்சநஞ்சமல்ல. உணவுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டுமானால் நிதிப் பட்டினியைத் தவிர்க்க முடியாது.
மேலும் நோட்டுகள் அடிக்கப்பட்டுப் பணவீக்கம் நிரந்தரமாவது மட்டுமல்ல. ஜி.டி.பி.யில் அதாவது வளர்ச்சியில் வீழ்ச்சியையும் பணவீக்கத்தில் வளர்ச்சியையும் ஒருங்கே பார்க்கலாம்.
உணவு வர்த்தகத்தில் அரசின் ஏகபோகம் என்ற நிலை மிகவும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் உள்ளது. அரசின் ஏகபோகம் மிகவும் செலவுள்ளது.
இச்செலவைத் தவிர்க்கப் படிப்படியாகத்தான் உணவுக் கட்டுப்பாட்டைத் தளர்ச்சி செய்து தனியார் கொள்முதலை அனுமதிக்க வேண்டும்.
சில மாநிலங்களில் மட்டுமே தனியார் கொள்முதல் உண்டு. தமிழ்நாட்டில் அரசு கொள்முதல் செய்யும்போதுதான் தனியாரும் ஓரளவுக்கு அரசு விலையை ஒட்டி நெல் வாங்குகின்றனர்.
பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உ.பி., ம.பி. போன்ற மாநிலங்களில் கோதுமையில் தனியார் கொள்முதல் அறவே இல்லை.
அரசு கொள்முதல் செய்தாலும் தனியார் கொள்முதல் செய்தாலும் விவசாயிகளுக்கு அடக்கவிலைக்குள்பட்ட ஆதரவு விலை தருவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
படிப்படியாக நெல், கோதுமைக் கொள்முதலை அரசு குறைத்துக்கொண்டு தனியார்வசம் ஒப்படைக்கும்போது சற்றுத் தரமான அரிசி, கோதுமை கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். உணவு வீணாவதையும் தவிர்க்கலாம்.
அரசு கொள்முதல் நெல், கோதுமை விஷயத்தில் குறையுமானால் பயறு - பருப்பு வகைப் பயிர்களும் புஞ்சைத் தானியப் பயிர்களும், எண்ணெய்வித்துப் பயிர்களும் ஊக்கம்பெற வேண்டும்.
நிலக்கடலை, எள், கடுகு போன்ற எண்ணெய்வித்துப் பயிர்களும் கொண்டக்கடலை, துவரை, உளுந்து, பச்சைப்பயறு போன்ற பருப்புவகைப் பயிர்களும் ஊக்கம் பெற்றால் இறக்குமதியைத் தவிர்க்கலாம். இதெல்லாம் நடக்காது.
2014-இல் மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றிபெற "ஆதார' அடையாள அட்டைப்படி அரிசி வாங்க ரொக்கமும் வழங்க வேண்டும்.
ரிசர்வ் வங்கியிடம் உணவுக்கடன் பெற்று உணவுக் கொள்முதலையும் தொடர வேண்டும். உணவுப் பாதுகாப்புச் சட்டத்தையும் இயற்ற வேண்டும். விளைவு, நிதிப் பட்டினிதான்.
நிதிப் பட்டினியை "வால்மார்ட்' தீர்த்து வைக்குமா? ரிசர்வ் வங்கி புதிய நோட்டுகளை அச்சிட்டு நிதிப் பட்டினியைப் போக்கி உணவு விலையை உயர்த்தி, ஏழைகளைப் பட்டினி போடுமா? புரியாத புதிர். வாழ்க பாரதம்.