முகப்பு
நேர்காணல்கள்

காங்கிரஸ் தலைமை ஒப்புதலுடன் விஜய்யை சந்தித்தேன் : பிரவீண் சக்கரவர்த்தி நேர்காணல்!

காங்கிரஸ் தலைமை ஒப்புதலுடன் தவெக தலைவர் விஜய்யை சந்தித்ததாக பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

Updated On : 9 ஏப்ரல், 2026 at 9:44 AM
பிரவீன் சக்கரவர்த்தி - ENS
பகிர்:

காங்கிரஸ் தலைமை ஒப்புதலுடன் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை சந்தித்ததாக அக்கட்சியின் தரவு பகுப்பாய்வுத் துறையின் தலைவர் பிரவீண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய்யை, பிரவீண் சக்கரவர்த்தி பலமுறை நேரில் சந்தித்தார். தொகுதிப் பங்கீட்டுக்கு முன்பு நடந்த இந்த சந்திப்பால், திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையே குழப்பம் நிலவுவதாக கருத்துகள் எழுந்தன.

Advertisement

ஒருவழியாக திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிகளின் எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டு, போட்டியிடும் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், விஜய் உடனான சந்திப்பு தனிச்சையான முடிவு அல்ல என பிரவீண் சக்கரவத்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலோடு நீங்கள் விஜய்யை சந்தித்தீர்களா?

விஜய் உடனான சந்திப்புகளை நான் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளவில்லை. கடந்த ஆறு மாதங்களில் நான் செய்த அனைத்தும், காங்கிரஸ் தலைமையின் முழுமையான ஒப்புதல் மற்றும் அங்கீகாரத்துடனே நடந்தது. கட்சியின் நலன் கருதி, எத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்ளவும், பலிகடாவாக மாறவும் நான் தயாராக இருந்தேன்.

எனது கட்சியின் நலனை முன்வைத்தே அனைத்தையும் செய்தேன். இது ஒரு தனிப்பட்ட முயற்சி அல்லது தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை என என் கட்சியைச் சேர்ந்தவர்களே பலவிதமான கருத்துகளைத் தெரிவித்திருந்தனர் என்பது எனக்குத் தெரியும். விஜய் உடனான அந்தச் சந்திப்பில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மற்றொரு மூத்த நிர்வாகியும் என்னுடன் கலந்துகொண்டிருந்தார்.

விஜய் உடன் முறையான கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்ததா?

இதற்கு பதில் அளிக்க முடியாது. ஆனால், அங்கு அரசியல் பேசினீர்களா? என்றால், நிச்சயமாக அரசியல்தான் பேசினோம். தமிழ்நாடு அரசியல் குறித்து பேசினீர்களா? என்றால், நிச்சயம் அதைத்தான் பேசினோம்.

ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எவ்வாறு காங்கிரஸ் தலைவர்களை சமாதானம் செய்தார்?

தமிழ்நாட்டில் அனுமனைப் போன்றது காங்கிரஸ் கட்சி. அதன் உண்மையான பலம் அதற்குத் தெரியாது. வாய்ப்பை எதிர்நோக்கியிருந்தோம். இம்முறை கட்சியைப் புதுப்பிக்கவும், மீண்டும் கட்டமைக்கவும், வலுப்படுத்தவும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு தென்பட்டது. காங்கிரஸ் கட்சி குறிப்பாக ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் இங்கு நன்மதிப்பைப் பெற்றுள்ளனர்.

இதுபோன்ற மாநிலங்களில் வலுவான கட்சியாக மாற ஒரு தேசிய கட்சி ஏன் உழைக்கக் கூடாது? காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களோ அல்லது தலைவரோ ஏன் ஒரு அமைச்சராகக் கூடாது? அதிகாரத்தை ஏன் பகிரக்கூடாது? எங்கள் கோரிக்கையை நியாயமற்றது எனக் கூற முடியாது.

ராகுல் காந்தி - மல்லிகார்ஜுன கார்கே உடனான கூட்டத்தில் தவெக உடனான கூட்டணிக்கு எத்தனை நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர்?

அந்தக் கூட்டம் திமுகவா? அல்லது தவெகவா? என்பது பற்றி அல்ல. மூன்றில் இரண்டு பங்கு நிர்வாகிகள் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என முன்வந்தனர். சிலர் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்தனர். ஒருசிலர் மட்டுமே, இது இரண்டுமே நடக்கவில்லை என்றால் வேறு வழிகளை ஆராய வேண்டும் என்றனர்.

அவர்கள் தவெகவை கூறினார்களா?

ஒருவேளை, அது மற்றொரு வழியாக இருக்கலாம்.

களத்தில் திமுக - காங்கிரஸ் தொண்டர்கள் எந்த அளவுக்கு இணக்கமாகச் செயல்படுவதாக நினைக்கிறீர்கள்?

காங்கிரஸ் தொண்டர்கள் தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என உணர்கிறார்கள். போட்டியிட உரிய இடங்கள் கிடைக்காததால், கட்சித் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். நம் அளவை நாம் அதிகரிக்காத வரை, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

திமுக - காங்கிரஸ் கூட்டணியின் வாய்ப்புகளை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?

இந்த தேர்தல் மிகக் கடுமையானதாக இருக்கும். தவெக மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றம் தற்போது பதவியில் இருப்பவர்களை பாதிக்கும்.

summary

"I met Vijay with the approval of the Congress leadership": Praveen Chakravarty Interview!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments