ஒரு தந்தை வங்கியில் தனிநபர் கடன் பெற்றிருந்த நிலையில், திடீரென அவர் இறந்துவிட்டால், அவரது மகன்தான் அந்தக் கடனை திரும்ப செலுத்த வேண்டுமா? என்ற சந்தேகம் சமூக வலைத்தளத்தில் ஒரு நபர் முன்வைக்க, அதற்கு பல வங்கி அதிகாரிகளும், சட்ட நிபுணர்களும் விளக்கம் கொடுத்திருப்பது வைரலாகியிருக்கிறது.
அதாவது, குடும்பத் தலைவர் ஒருவர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைகிறார். பிறகு, அவரது வங்கிக் கணக்குகளை முடித்து வைக்க அவரது மனைவி மற்றும் மகன் இருவரும் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குச் செல்கிறார்கள்.
அங்கு சென்ற பிறகு, அவர் ரூ.18.5 லட்சத்துக்கு தனிநபர் கடன் பெற்று, தற்போது ரூ.10.6 லட்சம் நிலுவையில் இருப்பதாகவும், அவர் அந்தக் கடனை காப்பீடு செய்யவில்லை, மகன்தான் கடனை திரும்ப செலுத்த வேண்டும் என்றும் தகவல் கிடைத்துள்ளத.
இது குறித்து அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு கருத்துக் கேட்டிருந்தார். அவர் ஒருவர்தான், இறந்தவரின் ஒரே வாரிசு. கடனுக்கான மாத தவணை ரூ.36 ஆயிரம். இது தன்னுடைய ஊதியத்தில் 90 சதவீதம். நான்தான் கடனை திரும்ப செலுத்த வேண்டுமா என்று கேட்டிருந்தார்.
தந்தையின் பணியிடத்திலிருந்து வர வேண்டிய தொகைகள் கிடைக்க இன்னமும் 6 - 8 மாதங்கள் வரை ஆகலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வழக்குரைஞர்கள் முதல் வங்கி அதிகாரிகள் வரை பலரும் பதிலளித்திருக்கிறார். இது வைரலாகியிருக்கிறது.
ஒரு வழக்குரைஞர் குறிப்பிடுகையில், தனிநபர் கடன், பாதுகாப்பற்ற கடன். எனவே நீங்கள் செலுத்த வேண்டியதில்லை. அந்த கடனுக்கு காப்பீடு செய்யப்பட்டிருந்தால், கடன் தொகையை காப்பீட்டு நிறுவனம்தான் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொருவர் கூறுகையில், நீங்கள் இந்த கடன் தொகையை செலுத்த வேண்டியதில்லை. இந்தக் கடனைப் பெறும்போது, அவருக்கு ஏதேனும் நடந்தால், வாரிசுதான் கடனை செலுத்த வேண்டும் என்று எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளிக்கப்பட்டிருந்தாலோ அல்லது கடனைப் பெறுவதற்கு இணை கடன்காரராக இவரது பெயர் சேர்க்கப்பட்டு கையெழுத்திட்டிருந்தாலோ தான் கடனை மகன் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு பயனர், முதலில் ஒரு வழக்குரைஞரை சந்தித்து அவரிடம் கூறுங்கள். கடன் ஆவணங்களை முழுமையாக படியுங்கள். அதில் வாரிசு கடனை செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தால் கடனை நீங்களே செலுத்துங்கள். இல்லாவிட்டால் ஒருபோதும் கடனை செலுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த கடன் ஆவணங்கள் ஏதேனும் ஒன்றில் நீங்கள் கையெழுத்திட்டிருக்கிறீர்களா என்று யோசியுங்கள். ஒருவேளை கையெழுத்திடாவிட்டால், தற்போது வங்கித் தரப்பில் ஏதேனும் கையெழுத்து வாங்க முயற்சிக்கலாம். எனவே, அனைத்து ஆவணங்களையும் முதலில் வங்கியிடமிருந்து கேட்டுப் பெருங்கள். பிறகு வழக்குரைஞரை ஆலோசியுங்கள் என்று பதிவிடப்பட்டுள்ளது.
அனைத்தையும் கேட்டறிந்துகொண்ட அந்த நபர், வங்கிக்கு ஆவணங்கள் கோரி மின்னஞ்சல் அனுப்பியிருப்பதாக பதிலளித்துள்ளார்.
அதேவேளையில், வீட்டுக் கடனாக இருந்தால், அந்த வீட்டை தன் பெயரில் மாற்றி, கடன் தவணையை மகன் செலுத்தலாம். அவ்வாறு செலுத்தத் தவறினால், வீட்டை ஏலம் விட்டு கடன் தொகையை வங்கி திரும்பப் பெறலாம்.
மேலும், தனி நபர் கடன் போன்றவற்றிலும், தந்தை பெயரில் சொத்துகள் இருந்தால் அவற்றை ஏலம் விட்டும் வங்கி கடன் தொகையை திரும்பப் பெறும் நடவடிக்கையில் ஈடுபடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. ஒரே நேரத்தில் தமிழகத்தை மிரட்டும் 2 புயல் சின்னங்கள்? சென்னைக்கு மழை வருமா? விரிவான பார்வை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.