17.5.1976: பிற நாடு விரோதம் காட்டினாலும் முடிந்தவரை நட்பைக் காப்பதே இந்தியாவின் கொள்கை - இந்திரா காந்தி
இந்தியாவின் கொள்கை குறித்து பிரதமர் இந்திரா காந்தி...
கண்ட்பாரா, (மகாராஷ்டிரம்) மே. 16- எல்லா நாடுகளுடனும் நட்புறவையும் சமாதானத்தையும் கைக் கொண்டிருப்பதே இந்தியாவின் கொள்கையாகும் என்று பிரதமர் இந்திரா காந்தி மீண்டும் வலியுறுத்தினார்.
இங்கு ஆதிவாசிகளின் கூட்டத்தில் பிரதமர் பேசினார். விடுதலையடைந்ததிலிருந்து மிகக் குறுகிய காலத்துக்குள்ளாக நாடு பல தடவை வெளி ஆக்ரமிப்பை எதிர்ப்படநேர்ந்தது. இதன் விளைவாக தீரமிக்க ராணுவ ஜவான்கள் உயிரிழக்க நேர்ந்ததுடன் எல்லா பொது சேம நலத் திட்டங்களும் பாதிக்கப்பட்டன என்றார் பிரதமர்.
எனவே ஆக்ரமிப்புக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உரிய கவனம் செலுத்தி வரும் அதே நேரத்தில் இந்தியா எல்லா நாடுகளுடனும் சமாதான நட்புறவுக் கொள்கையையே எப்போதும் பின்பற்றி வந்துள்ளது. பிறநாடு ஒன்று நம்மிடம் விரோதம் காட்டினாலும் சரி, ஆக்கிரமிப்பு செய்தால் தகுந்த பதிலடி கொடுப்பதும், மற்றபடி முடிந்த வரை நட்புறவைப் பராமரிக்க முயற்சிப்பதும் நமது கொள்கையாகும் என்று இந்திரா காந்தி கூறினார்.
Advertisement
போர் ஏற்படும் போது பெரும் சுமை ஏழை மக்கள் மீதும், அடித்தள மக்கள் மீதும் தான் விழுகிறது என்றும் பிரதமர் சொன்னார்.
பேரணி எல்லை தாண்டாமல் தடுக்க வங்கதேச துப்பாக்கி படைக்கு உத்தரவு
மால்டா, மே. 16 - மௌலானா பாஷானி பேரணியை சேர்ந்த தொண்டர்கள் யாரும் எல்லையை தாண்டி விடாமல் பார்த்துக் கொள்ளுமாறு வங்கதேச துப்பாக்கிப் படையினர் உஷார்ப் படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
வங்கதேச எல்லையில் உள்ள மால்டா, மூர்ஷிதாபாத் ஜில்லாக்களில் உள்ள தனது துப்பாக்கிப் படையினருக்கு வங்கதேச அரசாங்கம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.
இந்திய எல்லைப் பந்தோபஸ்து படையின் தலைமை அதிகாரியான அஷ்வனிகுமாருக்கு வங்கதேசத்தின் மேற்கண்ட முடிவு இன்று தெரிவிக்கப்பட்டது.
எல்லை பந்தோபஸ்து படையின் உயர் அதிகாரிகளுடன் மால்டாவில் உள்ள ஒரு எல்லைக் காவல் நிலையத்துக்கு அவர் இன்று சென்றிருந்தார். அங்கு வங்கதேசத் துப்பாக்கிப் படை அதிகாரி ஒருவர் அத்தகவலை அஷ்வினிகுமாரிடம் கூறினார்.
இதற்கிடையில் மால்டா, மூர்ஷிதாபாத் ஜில்லாக்களின் எல்லை முழுவதிலும் இந்திய எல்லை பந்தோபஸ்து படையினர் மிகவும் உஷாராக இருக்கிறார்கள்.
பராக்கா அணைக்குக் கூடுதலான போலீஸ் மத்திய ரிசர்வ் போலீஸ் பந்தோபஸ்து போடப்பட்டிருக்கிறது. யாரும் அங்கு வந்துவிடாமல் தடுக்க போதிய முன்னேற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டிருக்கின்றன. ...