முகப்பு
இந்தியா

பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா இன்று ஆஜராக வேண்டும்: உச்ச நீதிமன்றம்

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் குறிப்பிட்டபடி வியாழக்கிழமை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:29 AM
பகிர்:
Updated On : 29 டிசம்பர், 2023 at 12:22 AM

புது தில்லி, அக். 19: பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் குறிப்பிட்டபடி வியாழக்கிழமை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் அக்டோபர் 20-ம் தேதி பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

Advertisement

பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிகாட்டி, பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு இரண்டு வார அவகாசம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கர்நாடகம் பிரமாணப் பத்திரம் தாக்கல்: பெங்களூர், பரப்பன அக்ரஹாரா வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உள்ள ஜெயலலிதாவுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று பெங்களூர் நகர காவல் ஆணையரின் பிரமாணப் பத்திரத்தை கர்நாடக அரசு சார்பில் வழக்குரைஞர் அனிதா தேசாய் உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்தார்.

"பெங்களூருக்கு ஜெயலலிதா வந்தவுடன் கர்நாடக போலீஸôர் பாதுகாப்பு வழங்குவார்கள். அவர் நீதிமன்றத்துக்குச் சென்று திரும்பும் வரை சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அவருக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக போலீஸ் கமிஷனர் தலைமையில் சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது' என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா வழக்குரைஞர் எதிர்ப்பு:அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜெயலலிதா சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தஹி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்புத் தேவைகளை கர்நாடக மாநில போலீஸôரால் பூர்த்தி செய்ய இயலாது என்றார்.

ஜெயலலிதா செல்லும் இடத்துக்கு தேசிய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள 96 மணி நேரம் அவகாசம் தேவை. இதனால் அவருக்கு தேசிய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு கிடைக்காது என்றார்.

ஜெயலலிதா ஆஜராக வழங்கப்பட்டிருக்கும் இடம் விமான நிலையத்தில் இருந்து தொலைவில் உள்ளதால் நீதிமன்றத்தின் இடத்தை மாற்ற வேண்டும் என்றும் வாதிட்டார்.

நீதிபதிகள் உத்தரவு: பிரதமர் அவசர நிகழ்வில் பங்கேற்க செல்ல வேண்டும் என்றால் தேசிய பாதுகாப்புப் படையினர் 96 மணி நேரத்துக்கு முன்பு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்கிறார்களா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஜெயலலிதா பாதுகாப்பு தொடர்பாக கர்நாடக மாநில அரசுத் தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் மதியம் 12 மணிக்குள் தங்கள் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்

என்று தெரிவித்து மதியம் 2 மணிக்கு வழக்கின் விசாரணையை

நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மீண்டும் நீதிமன்றம் கூடியதும் தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் நீதிபதிகள் அளித்த உத்தரவு விவரம்:

பெங்களூருக்கு வரும் தேசிய, சர்வதேச பிரதிநிதிகளுக்கு போதிய பாதுகாப்பை மாநில போலீஸôர் வழங்கி வருகிறார்கள். அதேபோல் ஜெயலலிதாவுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று மாநில அரசுத் தலைமைச் செயலாளரும் டி.ஜி.பி.யும் உறுதியளித்துள்ளனர். ஜெயலலிதா, வேண்டுமென்றால் ஹெலிகாப்டரில் சென்று நீதிமன்றத்தில் ஆஜராகலாம். பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் (ஜெயலலிதா) எப்படி மக்களிடம் இருந்து விலகியிருக்க முடியும்? பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்படுவதால் ஜெயலலிதா வியாழக்கிழமை பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

ஜெயலலிதாவுக்குக் கர்நாடகத்திலும் தேசிய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகளிடம் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.பி. மல்ஹோத்ரா உறுதியளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.