பிரசார களத்தில் சரியான போட்டி! தவெக பிரசார வாகனத்தை தெறிக்க விட்ட திலகபாமா!
பிரசார களத்தில் சரியான போட்டியாக தவெக பிரசார வாகனத்தை தெறிக்க விட்டார் பாமக வேட்பாளர் திலகபாமா!
பாமக வேட்பாளர் திலகபாமா பிரசாரத்தின்போது தவெக பிரசார ஆட்டோ குறுக்கிட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. கூட்டணிக் கட்சி ஆதரவாளர்களின் எதிர்ப்பினால் ஆட்டோ ஓட்டமெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமா, மகாகவி பாரதி நகர் பகுதியில் உள்ள தெருக்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது மகாகவி பாரதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே தனது பிரசார வாகனத்தில் நின்றவாறு பேசத் தொடங்கினார்.
Advertisement
Advertisement
அவர் பேச ஆரம்பித்து சில நிமிடங்களில் அவ்வழியே தமிழக வெற்றி கழகத்தின் பிரசார ஆட்டோ ஒன்று அக்கட்சியின் பிரசார பாடலை ஒலிக்கவிட்டபடி கடந்து சென்றது.
சரியாக ஐந்து நிமிடங்களில் அந்த பிரசார ஆட்டோ மீண்டும் அவ்வழியே திரும்ப பிரசார பாடலை ஒலிக்கவிட்டபடி வந்தது. இம்முறை பாடல் ஒலியின் அளவு சற்று கூடுதலாக இருந்தது.
இதனை திலகபாமாவுடன் பிரசார வாகனத்தில் இருந்த கூட்டணி கட்சி நிர்வாகிகள் கவனித்து ஆட்டோவில் இருந்த தவெக தொண்டர்களை பார்த்து ஒலியை குறைக்கும்படி சைகை செய்தனர். ஆட்டோவில் இருந்தவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை.
இதனை கவனித்த திலகபாமா ஆட்டோவில் இருந்த நபர்களை பார்த்து, "பாட்ட நிறுத்துவியா மாட்டியா?" என கேள்வி எழுப்பினார். அதோடு நான் தேர்தல் ஆணையத்தில் முறையான அனுமதி பெற்று இங்கு பேசிக்கொண்டிருக்கிறேன். அப்படி பேசும்போது நீங்கள் ஒலியின் அளவை குறைக்க வேண்டும். வேண்டுமென்றே இங்கேயே சுற்றிக்கொண்டிருக்கிறீர்கள், முதலில் ஒலியின் அளவை குறையுங்கள் இல்லையென்றால் உங்கள் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்பேன் என்று கூறினார்.
ஆனால், ஆட்டோவில் இருந்தவர்கள் எதற்கும் மசியாமல் அதிக சப்தத்துடன் மெதுவாகவே சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த அதிமுக, பாமக, பாஜக தொண்டர்கள் அந்த ஆட்டோவை சூழ்ந்துகொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தவெக-வினர் ஆட்டோவை வேகமாக இயக்கி அங்கிருந்து ஓட்டம்பிடித்தனர்.
இப்படி பயந்து ஓடுகிறவர்கள் நமக்கு தேவைதானா என அங்கிருந்த பொதுமக்களை பார்த்து திலகபாமா கேள்வி எழுப்பி, தன்னுடைய பிரசாரத்தைத் தொடங்கினார்.
PMK candidate Thilagapama has made a perfect match on the campaign trail by splashing out on the TVK campaign vehicle!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.