முகப்பு
இந்தியா

தவிக்கும் தமிழ் மாணவி!

பெங்களூர், மே 29: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநில அளவில் 9-வது இடம் பிடித்திருந்தும் வறுமையின் காரணமாக உயர் கல்வி படிக்க முடியாமல் தவித்து வருகிறார் தமிழ் மாணவியான எஸ்.கே.சுகந்தி. அண்மையில் வெளியான எஸ்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 7:02 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 11:03 PM

பெங்களூர், மே 29: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநில அளவில் 9-வது இடம் பிடித்திருந்தும் வறுமையின் காரணமாக உயர் கல்வி படிக்க முடியாமல் தவித்து வருகிறார் தமிழ் மாணவியான எஸ்.கே.சுகந்தி.

அண்மையில் வெளியான எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கர்நாடக மாநில அளவில் 9-வது இடமும், கோலார் மாவட்டத்தில் முதலிடமும் பிடித்து சிறப்பிடம் பெற்றார் எஸ்.கே.சுகந்தி. கோலார் தங்க வயலில் அமைந்திருக்கும் பெமல் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். சுகந்தியின் குடும்பம் வறுமையில் வாடி வருகிறது. இவரது தந்தை குமாரகுரு 10 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதித்த நிலையில், வீட்டைவிட்டு வெளியேறினார்.

இவரது தாய் லட்சுமி, 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு சில ஆண்டு காலம் எல்.கே.ஜி. ஆசிரியையாக மாதம் ரூ.500 ஊதியத்துக்குப் பணியாற்றி வந்தார். 6 ஆண்டுகளுக்கு முன்பு இதயக் கோளாறு காரணமாக, வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டு வீட்டில் தனிப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கினார் லட்சுமி.

Advertisement

இது குறித்து லட்சுமி கூறியதாவது: இதய நோயால் அவதிப்படும் என்னால் குழந்தைகளின் உயர் கல்விக்கு செலவிட முடியாத நிலையில் உள்ளேன். என் மகள் ஜெயந்தி 2-ம் ஆண்டு பியூசி தேர்வில் 92.5 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். அடுத்த மகள் சுகந்தி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநில அளவில் 9-வது இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றார். இருவரின் உயர் கல்விச் செலவை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தவித்து வருகிறேன். தனிப் பயிற்சி வகுப்பில் போதுமான வருவாய் இல்லை. 15 மாணவர்கள் மட்டுமே வருகிறார்கள். மாதம் ரூ.50 கட்டணமாகத் தருகிறார்கள் என்றார்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சுகந்தி பெற்ற மதிப்பெண்கள்: கன்னடம் - 123, ஆங்கிலம் - 99, ஹிந்தி - 97, கணிதம் - 97, அறிவியல் - 98, சமூக அறிவியல் - 100, மொத்தம் 625-க்கு 614 மதிப்பெண் (98.24%) பெற்றுள்ளார்.

இது குறித்து சுகந்தி கூறியதாவது: தனிப் பயிற்சி வகுப்பில் என் அம்மாவுக்கு உதவியாக இருந்து வந்தேன். பள்ளி ஆசிரியர்கள், அம்மா, அக்கா ஆகியோரின் ஒத்துழைப்பால் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றேன். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டுமென்ற கனவு உள்ளது. எங்கள் குடும்பம் வறுமையில் உள்ளதால், இதை எப்படி சாதிக்கப் போகிறேன் என்பது தெரியவில்லை

என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.