அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதி தொடர்பான வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
இருபதாயிரம் ரூபாய் வரைக்குமான தேர்தல் நிதி விபரங்களை வெளியிடுவதில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்கும் வருமான வரிச் சட்டப் பிரிவை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை...
புதுதில்லி: இருபதாயிரம் ரூபாய் வரைக்குமான தேர்தல் நிதி விபரங்களை வெளியிடுவதில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்கும் வருமான வரிச் சட்டப் பிரிவை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை அவசர வழக்காக கருதி விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
தில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். மனுவில் அவர் கூறியிருந்ததாவது:
வருமான வரிச் சட்டப் பிரிவில் இருபதாயிரம் ரூபாய் வரைக்குமான தேர்தல் நிதி விபரங்களை வெளியிடுவதில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்கும் ஷரத்து உள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து தற்போது நிலவும் சூழலை பயன்படுத்தி, இருபதாயிரம் வரையிலான நிறைய டெபாசிட்டுகளை அரசியல் கட்சிகள் செய்து விடலாம்.
அதேபோல் அவ்வாறு டெபாசிட் செய்து வைக்கப்பட்டுள்ள பணத்தை அவர்கள் கணக்க்கிலிருந்து எடுத்து விடவும் வாய்ப்பு இருக்கிறது.எனவே இந்த வழக்கை அவசர வழக்காக கருதி ஜனவரி 3-ஆம் தேதி விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு ஷர்மா தனது மனுவில் குறிப்பிட்டுஇருந்தார். இந்த மனுவானது விடுமுறைக்கால நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஷர்மாவிடம், ' 1961-ஆம் ஆண்டிலிருந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக வருமான வரி சட்டத்தில் இந்த பிரிவு இருந்து வரும் நிலையில், தற்போது டெபாசிட்டுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 11-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.