முகப்பு
இந்தியா

எதிரி சொத்து சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் தாக்கல்

இதன்படி, பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து சென்றுவிட்டவர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் சொத்துகளை விற்பனை செய்ய

Updated On : 9 மார்ச், 2016 at 1:24 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:14 PM

எதிரி சொத்து சட்டத் திருத்த மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
 தேசப் பிரிவினையை அடுத்து, இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்றவர்களின் சொத்துகளை நிர்வாகம் செய்வதற்காக எதிரி சொத்து சட்டம் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக 1965-ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போருக்குப் பிறகு 1968-ஆம் ஆண்டு இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. சுமார் 48 ஆண்டுகள் பழைமையான இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர சமீபத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 இதன்படி, பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து சென்றுவிட்டவர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் சொத்துகளை விற்பனை செய்ய முடியாது. எதிரி சொத்துகளை இப்போது பராமரித்து வருபவர்கள் அது தனிநபராக இருந்தாலும் சரி, அரசுத் துறையாக இருந்தாலும் சரி அவர்களே அந்தச் சொத்துகளை வைத்துக் கொள்ள முடியும் என்பது எதிரி சொத்து சட்ட திருத்த மசோதாவின் முக்கிய அம்சங்களாகும்.
 மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு இந்த மசோதாவை மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். முன்னதாக, எதிரி சொத்து அவசரச் சட்டம் ஜனவரி 7-ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து இப்போது நாடாளுமன்றத்தில் அதற்குரிய சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.