ஈரானில் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேர் விடுவிப்பு
ஈரானில் சிறை பிடிக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
ஈரானில் சிறை பிடிக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள், ஈரானின் கடல் பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்ததற்காக அந்நாட்டு கடற்படையால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துக்காக அவர்கள் வேலை செய்து வந்தனர். ஈரானில் கைது செய்யப்பட்டபோது, அவர்கள் பயணம் செய்த 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், அவர்கள் விடுவிக்கப்பட்டதாக சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, டுவிட்டர் வலைதளத்தில் அவர் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
ஈரானில் சிறை பிடிக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விடுதலைக்காக ஈரான் தலைநகர் டெஹ்ரானிலுள்ள இந்தியத் தூதரகம் பெருமுயற்சி எடுத்தது. அதற்காக, அத்தூதரக அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த செய்தியில் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.