முகப்பு
இந்தியா

ஜிஎஸ்டி சட்டம் மத்திய அரசின் வரலாற்றுச் சாதனை

பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற வகையில் சரக்கு, சேவை வரிச் சட்டத்தை நிறைவேற்றியது மத்திய அரசின் வரலாற்றுச் சாதனை என்று பாஜக புகழாராம் சூட்டியுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:18 PM
பகிர்:

பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற வகையில் சரக்கு, சேவை வரிச் சட்டத்தை நிறைவேற்றியது மத்திய அரசின் வரலாற்றுச் சாதனை என்று பாஜக புகழாராம் சூட்டியுள்ளது.
கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் கடந்த இரு தினங்களாக புவனேசுவரத்தில் நடந்தது. நரேந்திர மோடி அரசின் பொருளாதார நடவடிக்கைகள், ஏழைகள் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றப்பட்டன.
இந்த தீர்மான விவரங்களை செய்தியாளர்களிடம் விளக்கினார் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர். அதன் விவரம்: ஜிஎஸ்டி சட்டம் என்கிற இந்த புதிய வரி நடவடிக்கையால் பணவீக்கம் குறைந்து சாமானியர்கள் பலன் பெறுவர். தொழில், வர்த்தக துறை வளர்ச்சி வேகமடையும். இதன் மூலம்
வேலைவாய்ப்புகள் பெருகும்.
ஒரு நாடு, ஒரு பட்ஜெட் என்கிற யோசனையின் அடிப்படையில் நிதிநிலை அறிக்கையில் ஓர் ஒழுங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் இணைக்கப்பட்டு கடந்த பிப்.1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனால் திட்ட அமலாக்கத்தில் கூடுதல் திறனைக் காணலாம்.
மருத்துவ, சுகாதாரக் கொள்கை, முத்ரா கடன் திட்டம், ஜன்தன் கணக்கு உள்ளிட்ட மத்திய அரசின் திட்டம் அனைத்தும் ஏழைகள் நலன் சார்ந்தவை. இதனால்தான் மக்களின் நம்பிக்கையை பிரதமர் பெற்றிருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் கட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியும் மணிப்பூரில் பாஜகவுக்கு அளிக்கப்பட்ட ஆதரவும் ஜாதி, மத அடிப்படையில் அல்லாமல் மக்கள் முதல் முறையாக வளர்ச்சிக்காக வாக்களித்துள்ளனர் என்பதை காட்டுகிறது.
ஒவ்வொரு அளவுக் குறியீட்டிலும் மோடி அரசு அதிக மதிப்பீட்டைத்தான் பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் இதற்கு ஆதாரம். நாட்டின் விடுதலைக்குப் பிறகு மிகவும் ஆக்கபூர்வமான, திறன்மிக்க, பிரபலமான தலைவர் மோடி என்பதை இந்த தேர்தல் முடிவுகளே காண்பிக்கின்றன.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் ஏழைகள் நலன் சார்ந்த பொருளாதார நடவடிக்கையே. அரசியல் கட்சிகளின் நன்கொடையில் வெளிப்படைத்தன்மை, தேர்தல் சீர்திருத்தங்கள் உள்ளிóட்ட நடவடிக்கைகளும் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை.
மேலும் மோடி தலைமையின் கீழ்தான் இஸ்ரோ அமைப்பும் ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் பறக்கவிட்டு உலக சாதனை புரிந்துள்ளது என தீர்மானங்களில் விளக்கப்பட்டிருப்பதாக ஜாவடேகர் கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →