அகமதாபாத்: பாஜக தேசியச் செயலர் அமித் ஷாவின் சொத்து, கடந்த 3 ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்ததாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து பாஜக விளக்கம் அளித்துள்ளது.
அதாவது, அமித் ஷாவின் மறைந்த தாய் வழி சொத்து இவருக்கு கிடைத்ததன் காரணமாகவே சொத்து அளவு அதிகரித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாஜக வெளியிட்டிருக்கும் விளக்க அறிக்கையில், கடந்த 2012ம் ஆண்டு அமித் ஷா தாக்கல் செய்த பிரமாணப் பத்திரிகையில் அவருக்கும், அவரது மனைவி சோனலுக்கும் ரூ.10.99 கோடி மதிப்புள்ள சொத்து இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.
அதன்பிறகு, 2013ம் ஆண்டு, அமித் ஷாவின் தாய் குசும்பென் உயிரிழந்தார். இதனால், ரூ.18.85 கோடி மதிப்புள்ள சொத்துகள் அமித் ஷாவுக்கு வந்தடைந்தது. இதனால், அமித் ஷாவின் சொத்து மதிப்பு ரூ.29.84 கோடி அளவுக்கு உயர்ந்தது. மேலும் இந்த சொத்தின் மதிப்பு உயர்ந்து, தற்போது இது ரூ.34.31 கோடியாக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அமித் ஷாவின் சொத்து கடந்த 2012ம் ஆண்டைக் காட்டிலும் தற்போது 300% அளவுக்கு உயர்ந்திருப்பதாக செய்திகள் வெளியாகின. குஜராத் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட அமித் ஷாவும், மத்திய அமைச்சராக இருக்கும் ஸ்மிருதி இரானியும் வேட்பு மனு தாக்கல் செய்த போது, அதனுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் இந்த செய்திகள் வெளியானது.
இதற்கு பாஜக தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டிருக்கிறது.