முகப்பு
இந்தியா

பாட்னா மருத்துவ நிறுவனத்தின் விண்ணப்பத்தில் அதிர வைக்கும் கேள்விகள்! கடுப்பான ஊழியர்கள்!!

பாட்னாவில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பத்தில் கேட்டிருந்த கேள்விகள் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Updated On : 3 ஆகஸ்ட், 2017 at 12:43 PM
பகிர்:


பாட்னா: பாட்னாவில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பத்தில் கேட்டிருந்த கேள்விகள் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பிகார் தலைநகர் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் மையம் 1983ம் ஆண்டு துவக்கப்பட்டது. இங்கு பணியாற்றும் ஊழியர்களிடம், நிர்வாகம் ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்து அதனை பூர்த்தி செய்யுமாறு கூறியிருக்கிறது.

இந்த விண்ணப்பம் நேற்று சமூக தளங்களில் வைரலாகப் பரவியதை அடுத்து பெரும் சர்ச்சைக் கிளம்பியது.

Advertisement

அந்த விண்ணப்பத்தில் அப்படி என்னதான் கேட்டிருந்தார்கள் என்றால், ஒவ்வொரு ஊழியரும் தங்களது திருமண நிலை குறித்து சான்றொப்பம் அளிக்கும் வகையில், அமைக்கப்பட்ட கேள்வியில் நீங்கள் கன்னியா? (விர்ஜின்), ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் உண்டா? வேறொரு மனைவியுடன் வாழும் நபரை திருமணம் செய்துள்ளீர்களா? வேறு எந்த மனைவியும் இல்லாத ஒருவரை திருமணம் செய்துள்ளீர்களா என்பது போன்ற அபத்தமான கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கிறது.

இந்த விண்ணப்பத்தால் அதிருப்தி அடைந்த ஊழியர்கள், இது மிகவும் அபத்தமாக இருப்பதாகவும், மிக மோசமான கேள்விகள் இடம்பெற்றிருப்பதாகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முதல் கேள்வியே, நீங்கள் திருமணமாகாத நபரா? வாழ்க்கைத் துணையை இழந்தவரா? கன்னியா? என்ற கேள்வி பெண் ஊழியர்களை அவமரியாதை செய்யும் வகையில் உள்ளது என்று பல ஊழியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். திருமணமாகாதவர் என்பதை கேட்பதற்கு, கன்னியா என்ற கேள்வி எவ்வாறு பொருந்தும் என்றும், இது மறைமுகமாக ஆபாசத்தைக் கொண்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து கருத்துக் கூறிய பெண் ஊழியர்கள், தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் தூய்மையானவர்களா என்பதை அறிந்து கொள்ள நிறுவனம் விரும்புகிறதா? என்று காட்டமாகக் கூறியுள்ளனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள மருத்துவ நிறுவனத்தின் கண்காணிப்பாளர், பெண்ணின் திருமண நிலையை அறிந்து கொள்ளவே விர்ஜின் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. திருமணமாகாதவர் என்ற அர்த்தத்துக்கே அப்படி கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகள் தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.