இந்த ஆண்டில் இந்தியாவிலேயே அதிக அளவு 'உபேர்' சவாரி செய்தவர் யார் தெரியுமா?
நடப்பு ஆண்டில் இந்தியாவிலேயே அதிக அளவு 'உபேர்' வாடகைக் கார் செயலி மூலர் பயணம் செய்தவர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
புதுதில்லி: நடப்பு ஆண்டில் இந்தியாவிலேயே அதிக அளவு 'உபேர்' வாடகைக் கார் செயலி மூலர் பயணம் செய்தவர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் வாடகைக் கார் வசதிகள் வழங்கும் செயலிகளில் முன்னணியில் இருப்பது உபேர். நாள் தோறும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தும் செயலியாக இது இருந்து வருகிறது. இந்நிலையில் 'உபேர்' நிறுவனத்தின் இந்த ஆண்டுக்கான வளர்ச்சி குறித்து அந்நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசிய பிரிவுத் தலைவரான அமித் ஜெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தில்லியைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் (பெயர் வெளியிடப்படவில்லை) ஒரு நாளைக்கு சராசரியாக ஐந்து சவாரிகள் என்ற விதத்தில் இந்த ஆண்டு இதுவரை 1969 சவாரிகள் மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் அவர் இந்தியாவிலேயே இந்த ஆண்டு அதிக அளவு 'உபேர்' வாடகைக்கு கார் செயலி மூலர் பயணம் செய்தவர் என்ற பெருமைக்கு உரியவராகிறார்.
Advertisement
அதே போல 'உபேர்' வாடகைக்கு கார் செயலியுடன் இணைந்து சேவை வழங்கும் ஓட்டுனர்களில், தில்லியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஒருவர் கடந்த நான்கு ஆண்டுகள், இரண்டு மாதங்கள் பணியாற்றியதன் மூலம், நீண்ட காலம் உபேருடன் இணைந்து சேவை வழங்கும், 'ஓட்டுநர் பங்குதாரராக' சாதனை படைத்துள்ளார்.
அதே போல இந்த ஆண்டில் நாங்கள் வெறும் ஒரு 'ஸ்டார்ட் அப்' நிறுவனம் என்பதிலிருந்து நீடித்த வளர்ச்சி அடைய உள்ள ஒரு நிறுவனமாக மாறியுள்ளோம். இந்த ஆண்டு எங்கள் வளர்ச்சியானது இரட்டை இலக்கத்தில் அமைந்துள்ளது. ஒரு நாளைக்கு பத்து லட்சத்திற்கும் அதிகமான சவாரிகளை உபேர் மூலம் வாடிக்கையாளர்கள் மேற்கொள்கின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.